அரக்கோணம்: வேலூர் மாவட்டம் அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர். பின்னர், கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது: `வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 348 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். தற்போது நடப்பாண்டில் டெங்கு காய்ச்சல் இருமடங்காக அதிகரித்து 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அபாய கட்டத்தை தாண்டி உள்ளது.
இதில், வேலூர் பகுதியில் 135 பேரும், காவேரிப்பாக்கம் பகுதியில் 111 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். முற்றிலுமாக, டெங்குவை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார். இதற்கிடையே, அரக்கோணம் ரயில் நிலையத்தில் டெங்கு உற்பத்தி செய்யும் லார்வா புழுக்கள் ஆங்காங்கு இருப்பது அதிகாரிகள் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே பொதுசுகாதார பிரிவுக்கு 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.