×

மகனின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக வந்த பைனான்ஸ் அதிபர், மனைவியை கொன்று புதைத்த கொடூர அக்கா: வெள்ளக்கோவில் போலீசார் தீவிர விசாரணை

வெள்ளக்கோவில்: மகனின் திருமண பத்திரிகை கொடுக்க வந்த பைனான்ஸ் அதிபரையும் அவரது மனைவியையும் சொந்த அக்காவே கொன்று புதைத்த  சம்பவம் வெள்ளக்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..மதுரை ஆரப்பாளையம் மேலப்பொன்னகரத்தைச்சேர்ந்தவர் செல்வராஜ் (50). பைனான்சியர் மற்றும் டெக்ஸ்டைல் நடத்தி வந்தார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், ஈசநத்தம், சூளபுரம் கிராமம். இவரது மனைவி வசந்தமணி (47). இவர்களுக்கு சரண்யா என்ற மகளும், பாஸ்கரன் என்ற மகனும் உள்ளனர். சரண்யாவுக்கு திருமணம் ஆகி, மதுரையில் வசிக்கிறார். பாஸ்கரன், சென்னையில் பைனான்ஸ் மற்றும் துணிக்கடை நடத்தி வருகிறார். மகன் பாஸ்கரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பத்திரிகை அடித்து உற்றார், உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர். முதல் பத்திரிகையை மதுரை விளாங்குடியில் வசிக்கும் மகள் சரண்யாவிடம் கொடுத்துள்ளனர். பின்னர், நேற்றுமுன்தினம் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் உத்தண்டிகுமாரவலசுவில் வசிக்கும் செல்வராஜின் அக்கா கண்ணம்மா(54) வீட்டுக்கு பத்திரிகை கொடுக்க இருவரும் சென்றுள்ளனர்.

அங்கு பத்திரிகை கொடுத்து விட்டு காரில் மதுரைக்கு புறப்பட்ட தகவலை மகன் பாஸ்கரனிடம் செல்போனில் ெசல்வராஜ் தெரிவித்துள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. இந்தநிலையில், கரூர் மாவட்டம் சுக்காலியூர்-திருச்சி அணுகுசாலையில் நேற்றுமுன்தினம் இரவு கார் ஒன்று நீண்டநேரமாக நின்று கொண்டிருந்தது. காரின் கதவுகள் திறந்து கிடந்தது. காரினுள் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கார் நிற்பதை பார்த்து, சுங்கசாவடி ஊழியர்கள் தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார் வந்து பார்த்தபோது, காருக்குள் திருமண அழைப்பிதழ்கள் இருந்தது. பின்னர் அங்கு கிடந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு போலீசார் பேசுகையில்,மகன் பாஸ்கரன் எடுத்தார். அப்போது, தனது பெற்றோர் மாயமாகி விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, பாஸ்கரன் நேற்று கரூர் வந்து தாந்தோணிமலை போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இதன்படி, வெள்ளக்கோவிலில் உள்ள கண்ணம்மா வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்வராஜின் அக்கா கண்ணம்மா முன்னுக்குப் பின் முரணாக பேசினார். தீவிர விசாரணையில் டீயில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து தம்பி செல்வராஜ் , அவரது மனைவி வசந்தமணியை கொன்று  வீட்டுக்கு அருகே புதைத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.  வீட்டின் அருகே உள்ள குழிக்குள் பாதி புதைக்கப்பட்ட நிலையில் இருவரது சடலங்களையும் போலீசார் கண்டு பிடித்தனர். இதையறிந்து, மகன் பாஸ்கரன், மகள் சரண்யா கதறி அழுதனர். இன்று தம்பதியின் பிணங்களை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது. சொத்துக்காக அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? அல்லது வேறு காரணமா? என கண்ணம்மாவிடம் வெள்ளக்கோவில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Chancellor ,president ,sister ,wedding , Son, Wedding Invitation, Accounting Chancellor, Wife, Sister, White House
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...