கீழக்கரை: ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான அரசு கண்காட்சியில் கீழக்கரையில் உள்ள தனியார் பள்ளி மாணவர் விவசாயத்திற்கு உதவும் கருவியை தயார் செய்து சாதனை புரிந்துள்ளார். விவசாயத்துக்கு பேருதவியாக இருக்கும் வகையில் நிலத்தின் ஈரப்பதம், தாதுபொருள், மண்வளம் மற்றும் பல்வேறு தகவல்களை தரும் புதிய நீர் சேமிப்பு கருவி ஒன்றை ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர் முகமது சமர் மரைக்கா கண்டுபிடித்துள்ளார்.
இந்த கருவியை விவசாய நிலத்தில் புதைத்து மண்வளம், பருவநிலை, ஈரப்பதம் உள்ளிட்டவற்றை அறிவதோடு, இதனை மின் மோட்டாரிலும் இணைத்து விவசாய நிலத்திற்கு தேவையான அளவு நீர் பாய்ச்ச முடியும். தேவையான அளவு விவசாயத்துக்கு நீர் கிடைத்தவுடன் மின் மோட்டார் இயக்கம் நிறுத்தப்படும். இதன் அத்தனை இயக்கத்தையும் ‘வைபை’ நெட்வொர்க் மூலம் மானிட்டர் மூலம் அறிந்து கொள்வதோடு அதனை இயக்கவும் முடியும். மிகச்சிறந்த கண்டுபிடிப்பான இதனை வெறும் ரூ.2 ஆயிரத்திற்குள் வடிவமைத்துள்ளார்.
இதுபோன்ற கருவிகளை இதற்கு முன் கண்டுபிடித்திருந்தாலும், மிக குறைந்த செலவில் கண்டுபிடித்தது இதுவே முதன்முறையாகும். ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான அரசு அறிவியல் கண்காட்சியில் இந்த கருவி வைக்கப்பட்டுள்ளது.