×

ரங்கசாமி ஆட்சி காலத்தின் 1000 கோடி கடனை வட்டியுடன் நாங்கள் செலுத்தியுள்ளோம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேச்சு

புதுச்சேரி: ரங்கசாமி ஆட்சி காலத்தின் ₹1000 கோடி கடனை நாங்கள் வட்டியுடன் திருப்பி செலுத்தியுள்ளோம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுவை காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ்  வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதல்வர் நாராயணசாமி கிருஷ்ணாநகரில் நேற்று 2வது நாளாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் அமைச்சர் நமச்சிவாயம், வைத்திலிங்கம் எம்பி, திமுக மாநில அமைப்பாளர்கள் சிவா எம்எல்ஏ மற்றும்  கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.பிரசாரத்தின்போது, நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதலில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வந்தோம்.  ரவுடிகள்  ராஜ்ஜியத்தை அடக்கி இருக்கிறோம். ரவுடிகள் இப்போது சிறையில் இருக்கிறார்கள். 2ம் கட்ட ரவுடிகள்தான் உலவி வருகின்றனர்.  

கல்வி, மருத்துவத்தில் முதலிடம் பெற்றுள்ளோம். ரங்கசாமி ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட 1000 கோடி கடனை நாங்கள் வட்டியுடன் திருப்பி செலுத்தியுள்ளோம். நாங்கள் கடன் வாங்கவில்லை. வருமானத்தை  பெருக்கி உள்ளோம். ரங்கசாமி ஆட்சியில் ₹5 ஆயிரம் கோடியாக வருவாய் இருந்தது. நாங்கள் ₹8,500 கோடியாக வருமானத்தை உயர்த்தி இருக்கிறோம். நெல்லித்தோப்பு இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் என  அடுத்தடுத்து மக்கள் ரங்கசாமியை புறக்கணித்து விட்டார்கள். இப்போது காமராஜர் நகர் தொகுதியிலும் மக்கள் அவரை புறக்கணிப்பார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Narayanasamy ,Rangasamy ,Puducherry , Rangasamy regime, Puducherry Chief Minister Narayanasamy
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி