சீன அதிபர் ஜின்பிங் தனி விமானம் மூலம் நேற்று மதியம் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் விமானத்தில் இறங்கியதும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கீழே இறங்கிய அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
அப்போது அங்கு 10 நிமிடங்களுக்கு மேல் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அதை நின்றபடியே சீன அதிபர் ரசித்து பார்த்தார். மேளதாளங்கள் முழங்க கரகாட்ட குழுவினரின் ஆட்டம் பாட்டம், கும்பாட்டம், பரதநாட்டியம், ஒயிலாட்டம் என கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை பார்த்து ரசித்த ஜின்பிங் அவர்களுக்கு கைஅசைத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, மாமல்லபுரம் புறப்பட்ட அவருக்கு கிண்டியில் இருந்து வழிநெடுக 34 இடங்களில் மேளதாளங்கள் முழங்க பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை ஜின்பிங் காரில் இருந்தபடியே ரசித்தபடி சென்றார்.