காஞ்சிபுரம்: மாமல்லபுரத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் வருவாய் அலுவலர் சுந்திரமூர்த்தி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களும் கார்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் பகுதியில் இருதலைவர்கள் வரலாற்று நிகழ்வானது இன்று நடைபெறவுள்ளது. அதனையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் வருவாய் அலுவலர் சுந்திரமூர்த்தி ஆகியோர் தற்போது நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் கிட்டத்தட்ட 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. நுழைவு வாயிலில் பூக்கள் மற்றும் வாழை மரங்கள் தோரணமாக கட்டப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்கள் இருசக்கர வாகனங்களை மட்டுமே இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு அனைத்து பணிகளும் சரிவர நடத்தப்படுகிறதா? எனவும், போலீசார் பாதுகாப்பு வலுவானதாக உள்ளதா எனவும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று சோதனை மேற்கொண்டுள்ளார். அவருடன் வருவாய் அலுவலக அதிகாரியும் இணைந்துள்ளார். தொடர்ந்து, அப்பகுதியில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. அவை அனைத்திலும் கார்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கபட்டிருக்கிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாமல்லபுரம் பகுதியில் மட்டுமே 7 இடங்களில் அதாவது மாமல்லபுரம் பேருந்து நிலையம், அர்ஜுனன் தபசு, கடற்கரை செல்லும் பகுதி, மாமல்லபுரம் நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளில் நடன நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தலைவர்கள் வரும்பொழுது அவர்களை கொடியசைத்து உற்சாகப்படுத்தும் விதமாக பொதுமக்கள் நிற்பதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிர சோதனைக்கு உட்படுத்த பின்னரே அனைத்து வாகனங்களும் உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றன.