×

உலக குத்து சண்டை போட்டி அரை இறுதியில் மேரிகோம்

உலன் உடே: உலக குத்துசண்டை போட்டி  அரை இறுதிக்குள் இந்தியாவின் மேரி கோம் நுழைந்தார். பெண்களுக்கான உலக குத்து சண்டை போட்டி ரஷ்யாவில் உள்ள உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 51 கிலோ எடை  பிரிவில் இந்தியாவின் மேரி கோம் பங்கேற்று அசத்தி வருகிறார். கால் இறுதி போட்டிக்கு முந்தைய போட்டியில் மேரி கோம் தாய்லாந்து வீராங்கனை ஜுடாமஸ் ஜிட் பாங்கை எதிர்கொண்டார். பரபரப்பாக இருந்த இந்த போட்டியில் மேரி கோம்  வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு முன்னேறினார். நேற்று கால் இறுதி போட்டி நடந்தது. இதில் மேரி கோமும் கொலம்பியாவின் வெலன்சியா விக்டோரியாவும் மோதினர். மேரிகோமின் அதிரடி தாக்குதலுக்கு   வெலன்சியா  விக்டோரியாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. எளிதாக வெற்றி பெற்ற மேரி கோம் அரை இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.

சனிக்கிழமை நடக்கும் அரை இறுதியில் துருக்கி வீராங்கனை பூசெனாஸ் காகிரோகுளுவுடன் மேரிகோம் மோதுகிறார். பூசெனாஸ் காகிரோகுளு ஐரோப்பிய சாம்பியன் ஆவார். இதுகுறித்து மேரி கோம் கூறுகையில், அரை இறுதி போட்டி எனக்கு  எளிதாகவே இருந்தது. வெலன்சியா விக்டோரியா முத்திரை பதிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு தக்குதலை தொடர்ந்தார். எனக்கு சரியான நேரம் வரும் என்று எதிர்பார்த்தேன். அதை பயன்படுத்தி எளிதில் அவரை வீழ்த்தினேன். ஆனால்  கால் இறுதி போட்டிக்கு முந்தைய போட்டி கடினமாக இருந்தது தாய்லாந்து வீராங்கனை ஜுடாமஸ் திடமானவர். அவரை கடினமாகவே நான் எதிர்கொண்டேன். அரையிறுதி போட்டி எப்படி இருக்கும் என்று இப்போதே கூற முடியாது. என்றாலும்  வெற்றி பெற முயற்சி செய்வேன் என்றார். உலக குத்துசண்டை போட்டிகளில் மேரிகோம் 6 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். ஒரு வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Marigome ,World Boxing Tournament ,the End , Marigome , World Boxing Tournament
× RELATED தென்னாப்பிரிக்காவை காட்டிலும் வேகம்:...