×

காதலை ஏற்க மறுத்த மாணவி எரித்து கொலை: தீ குளித்து வாலிபர் தற்கொலை

திருவனந்தபுரம்: கொச்சியில்  ஒருதலை காதலை ஏற்க மறுத்த பிளஸ்1 மாணவியை நேற்று அதிகாலை வீட்டுக்குள்  புகுந்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற வாலிபர் தானும் பெட்ரோல் ஊற்றி  தீ குளித்து தற்கொலை செய்து கொண்டது   பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம்  கொச்சி காக்கநாடு பகுதியை சேர்ந்தவர்  ஷாலன். இவரது மகள் தேவிகா (17). அந்த  பகுதியில் உள்ள ஒரு பள்ளியில்  பிளஸ் 1 படித்து வந்தார். எர்ணாகுளம்  வடக்கு பரவூர் பகுதியை சேர்ந்தவர்   மிதுன். பெயின்டிங் தொழிலாளி. இவர்  மாணவி தேவிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தேவிகா  8ம்  வகுப்பு படிக்கும் போதே அவரை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து  வந்துள்ளார். அப்போது தனது காதலை  வெளிபடுத்தியதாக தெரிகிறது.  ஆனால் தேவிகா  அவரை காதலிக்க மறுத்துவிட்டார். இதனால் தேவிகா மீது மிதுன் வெறியில்  இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஷாலன் மற்றும்  குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் வீட்டில் தூங்கினர். நேற்று  அதிகாலை சுமார் 1  மணியளவில் மிதுன் பெட்ரோல் கேனுடன் பைக்கில் தேவிகா  வீட்டுக்கு சென்றார்.  வீட்டின் முன்பு நின்றுகொண்டு சிறிது பெட்ரோலை தனது  உடலில் ஊற்றியுள்ளார். பின்னர் வீட்டின் கதவை பலமாக தட்டினார்.  அப்போது ஷாலன் கதவை திறந்தார். கதவு திறந்ததும் அத்துமீறி வீட்டுக்குள்  நுழைந்து தேவிகா எங்கே என்று  சத்தம் ேபாட்டவாறு உள்ளே நுழைந்துள்ளார்.  சத்தம்  கேட்டு தேவிகாவும் எழுந்து வந்து கொண்டிருந்தார். கண் இமைக்கும்  நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் வீட்டில் உள்ளவர்கள் என்ன நடக்கிறது  என்பதை உணர்வதற்குள் தேவிகாவின்  உடலில் மிதுன் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.  தீ மளமளவென எரிந்ததால் தேவிகா உடல் கருகியது. வலி தாங்க முடியாமல் அலறி  துடித்தார். அவரை காப்பாற்ற வீட்டில் உள்ளவர்கள் முயற்சித்தனர்.

அதன்  பின்னரும் வெறி அடங்காமல் கத்திய மிதுன் வீட்டிற்கு வெளியே வந்து வீட்டின்  முன்பு நின்று கொண்டு மீதம் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ  வைத்தார். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து  இருவரையும்  மீட்டனர். அதற்குள் தேவிகா உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  இறந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மிதுனை அக்கம்  பக்கத்தினர் மீட்டனர். தொடர்ந்து அவரை எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு   கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மிதுனும் பரிதாபமாக  இறந்தார். இந்த சம்பவம் குறித்து காக்கநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர். மாணவியை  எரித்துக் கொன்று, ஒருதலை காதலன்  தற்கொலை செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Student ,teenager ,death ,suicide , Love, student burned to death, fire bathing, teenage suicide
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...