சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் மீது விழுந்தது. அப்போது, கீழே விழந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதில் சுபஸ்ரீ உடல் நசுங்கி பலியானார். இதுெ தாடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் உட்பட பலர் கடந்த 27ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த 12 நாட்களாக சிறையில் இருக்கும் தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயகோபால் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், மகனின் திருமணத்திற்காக வாழ்த்து கூறி கட்சியினர் பேனர் வைத்தனர். வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் இல்லை. கட்சியினர் பேனர் வைத்ததற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. காவல்துறையினர் இயந்திரத்தனமான எங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விசாரணை முடிந்துவிட்ட நிலையில் என்னை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஆஜராக இருப்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசுத்தரப்பில் கோரப்பட்டது.இதை ஏற்ற நீதிபதி, விசாரணையை 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.