சென்னை: இந்தி மொழியை திணிப்போம் என்ற பாஜ தலைவர்களில் ஒருவரான இல .கணேசனின் பேச்சுக்கு நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா கூறியுள்ளார்.
சென்னை கொளத்தூர் அகரம் சந்திப்பில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள காந்தியடிகள் சிலை வரை சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் கோபண்ணா இந்த அமைதி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். அமைதி ஊர்வலத்திற்கு பிறகு கோபண்ணா செய்தியாளரிடம் பேசியது: ராமதாசும் அன்புமணியும் இந்த நேரத்தில் எதற்காக பிரதமரை சந்தித்தார்கள் என்பது தெரியவில்லை. எங்களை பொறுத்தவரை நாங்குநேரி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
நாங்குநேரியில் பாஜக -அதிமுக கூட்டணியை மக்கள் வெறுத்து வருகின்றனர். நேற்று வரை அதிமுக பாஜக கூட்டணியை நம்பியிருந்த கிருஷ்ணசாமி இன்று அந்தக் கூட்டணிக்கு எதிராக பேசியுள்ளார். இதன் மூலமாக மறைமுகமாக திமுக காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வரலாறு தெரியாமல் இல கணேசன் பேசுகிறார். இந்தி மொழியை படிப்பதில் தவறு கிடையாது. இந்தி மொழியை திணிப்பதில் தவறு உள்ளது. மக்களாக விரும்பி படிப்பதற்கு இந்தி பிரசார சபா உள்ளது. ஆனால் விருப்பப் பாடமாகவோ அல்லது ஒரு மொழியை திணிக்கின்ற வகையிலோ பாஜக எடுக்கின்ற முடிவிற்கு காங்கிரஸ் ஒத்துக்கொள்ளாது. இந்தி மொழியை நிச்சயம் திணிப்போம் என இல. கணேசன் பேசுவதற்கு நாங்குநேரி மக்களும் விக்ரவாண்டி மக்களும் உரிய பாடம் புகட்டுவார்கள் என்றார்.