சேதுபாவாசத்திரம்: நடுக்கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தஞ்சை, நாகை மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ரத்தினமணி (25), முருகன் (40), சரவணன் (25) ஆகியோரும், கள்ளிவயல்தோட்டம் முகமது முகைதீனுக்கு சொந்தமான பைபர் படகில் நாகை மாவட்டம் கீச்சான்குப்பத்தை சேர்ந்த உதயா (28), இலக்கியன் (30), கனகராஜ் (34) மற்றும் ஒருவர் என 4 பேரும் நேற்றுமுன்தினம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.இந்நிலையில் நேற்று காலை 20 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 7 பேரையும் சிறைபிடித்தனர். பின்னர் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.