டெல்லி: அண்மையில் டெல்லி - லக்னோ வழித்தடத்தில் இயங்கும் தேஜாஸ் அதிவேக ரயில் தனியார் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மேலும் 150 பயணிகள் ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்பந்த முறையில் மத்திய அரசு ஒப்படைக்க உள்ளது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக உயரதிகாரம் கொண்ட சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவுக்கு நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக மாற்ற 400 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், முதலில் சில முக்கிய ரயில் நிலையங்களுக்கு முன்னுரிமை கொடுத்து மேம்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் ரயில்வே அமைச்சருடன் மேற்கொண்ட விரிவான கலந்துரையாடலில், குறைந்தபட்சம் 50 ரயில் நிலையங்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் முதல்கட்டமாக 150 பயணிகள் ரயில்களை இயக்க தனியாரை அமர்த்த ரயில்வே முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறப்பு குழுவில் யாதவ், அமிதாப் தவிர, பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர், ரயில்வே பொறியியல் வாரியம் மற்றும் ரயில்வே போக்குவரத்து வாரியம் உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள் என்றும் அமிதாப் காந்த் குறிப்பிட்டார்.