களக்காடு: ஏராளமான நலத்திட்டங்களை வாரி வழங்கும் அதிமுக அரசிற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பிரசாரத்தின்போது தெரிவித்தார். களக்காடு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தெற்குகாடுவெட்டி கிராமத்தில் அமைச்சர் பேசும்போது, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் சாதாரண தொண்டர் மட்டுமே. அவர் பணத்தை நம்பி நிற்கவில்லை. இந்த தொகுதி வாக்காளர்களை நம்பி தேர்தலில் நிற்கின்றார். தொகுதி விட்டு தொகுதி மாறி நிற்பது தலைவர்களுக்குதான் பொருந்தும். ராகுல்காந்தி, சோனியா போன்ற அழகிரி போன்ற முன்னணி தலைவர்கள் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நிற்கலாம். உள்ளூரில் வசிக்கும் வேட்பாளரான எங்களது வேட்பாளரை மக்கள் வெற்றிபெற செய்ய வைக்க முடிவு செய்துவிட்டனர்.
கோர்ட்டில் அனைத்தும் சரி செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது. தேர்தலை கண்டு பயப்படுகின்ற கட்சி அதிமுக கிடையாது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக மாபெறும் வெற்றிபெறும். நாங்குநேரி தொகுதியில், ஜெயலலிதா ஆட்சி காலத்தில்தான் வடக்கு பச்சையாறு நிர்த்தேக்கம் கட்டப்பட்டது. எடப்பாடியார் ஆட்சியில் வடக்கு பச்சையாறு நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. களக்காடு பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக முதல்வர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒன்றிய கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். கிராமங்களில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருவது அதிமுக அரசுதான்.
தாய் வீட்டு சீதனமாக தாலிக்கு தங்கம் வழங்கும் அரசு ஜெயலலிதா வழியில் நடைபெறும் எடப்பாடியார் அரசுதான். 20 கிலோ விலையில்லா அரிசி, ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், மடிக்கணினி உட்பட ஏராளமான நலத்திட்டங்களை வாரி வழங்கும் அதிமுக அரசிற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். சேர, சோழ, பாண்டியர் காலத்திற்கு பிறகு குடி மராமத்து பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடியார் செய்து வருகின்றார். குடிமராமத்து பணியின் நாயகனாக எடப்பாடியார் திகழ்கின்றார். எடப்பாடியார் ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று தெரிவித்தார். பிரச்சாரத்தில் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், களக்காடு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், ஜெ.பேரவை ஒன்றிய செயலாளர் பாபு மற்றும் கிளை செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.