×

காங்கிரஸ் பேரழிவை சந்திக்கும்: சல்மான் குர்ஷித்தை தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியா கருத்து...கட்சியினர் மத்தியில் சலசலப்பு

டெல்லி: காங்கிரஸ் பேரழிவை சந்திக்கும் என காங்கிரஸ் முக்கிய தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கருத்தால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து ராகுல்காந்தி தலைவர்  பதவியில் இருந்து விலகினார். சோனியாகாந்தி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, காங்கிரசின் தற்போதைய நிலைமை குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் டெல்லியில் நேற்று பேட்டியளித்தார்.  அப்போது; பழம்பெரும் கட்சியான காங்கிரசின் தற்போதைய நிலை குறித்து கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கவலை தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை அடுத்து கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா  செய்ததால், காங்கிரஸ் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறினார்.

பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சியும் ராகுல் காந்தி, தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அவரது இந்த நடவடிக்கையால் கட்சிக்குள் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது. ராகுல் காந்தியின் முடிவை  தாங்கள் மதிப்பதாகவும், அதே நேரத்தில், நெருக்கடியான சூழலில் கட்சி இருப்பதைப் பார்க்கும் போது வேதனையாக இருப்பதாகவும் கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகம் ஊட்ட சில நடவடிக்கைளை எடுத்தாக வேண்டும். காங்கிரஸ்  கட்சியின் தலைவர் பொறுப்பில் இல்லாத போதிலும் கட்சியின் முக்கிய தலைவர்களில் அவரும் ஒருவர். கட்சி தற்போதைய நிலைக்கு சென்றதற்கான காரணத்தை அறிந்து நடவடிககை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி குறித்து முறையாக ஆலோசிக்கப்படவில்லை. இதேபோக்கு தொடர்ந்து நீடித்தால் காங்கிரஸ் கட்சி கடுமையான தள்ளாட்டத்திற்கு தள்ளப்படுவதோடு, வரவிருக்கும், மகாராஷ்டிரா,  அரியானா சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

காங்கிரஸ் கட்சி மிக மோசமான நிலையில் உள்ளதாக கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் நேற்று தெரிவித்த நிலையில்,ஜோதிராதித்ய சிந்தியாவும் அதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி  உள்ளது.கட்சி தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ததால் கட்சி நெருக்கடியில் உள்ளதாகவும், தள்ளாட்டமான சூழலை சந்தித்து வருவதாகவும் சல்மான் குர்ஷித் கூறி இருந்தார். கட்சியின் தலைமை பதவியில் வெற்றிடம்  ஏற்பட்டுள்ளதாகவும் கூறி இருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, மற்றவர்களின் கருத்துக்கள் பற்றி நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. கட்சியின் நிலைமையை ஆய்வு செய்து, மேம்படுத்த வேண்டும்.  அதற்கு சில மணி நேரம் போதும். உடனடியாக கட்சியின் நிலைமையை சரி செய்து காப்பாற்றாவிட்டால் கட்சி பேரழிவை சந்திக்கும் என்றார்.

ம.பி., மாநில காங்., பதவி தொடர்பாக கடந்த 2 மாதங்களாக கட்சி தலைமை மீது ஜோதிராத்ய சிந்தியா அதிருப்தியில் உள்ளதாகவும், அவர் காங்.,ல் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் கட்சியின்  தற்போதைய நிலை குறித்து அவர் பேசி உள்ள கருத்து கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை மோடி அரசு நீக்கியதற்கும் ஆதரவாக ஜோதிராதித்ய சிந்தியா கருத்து கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Congress ,Jyotiraditya Scindia ,Salman Khurshid , Congress will meet with disaster: Jyotiraditya Scindia following Salman Khurshid ...
× RELATED சொரோசுடன் இணைத்து வீடியோ; தேர்தல் ஆணையத்தில் பாஜ மீது காங். புகார்