×

வத்தலகுண்டு அருகே தண்ணீர் இன்றி தவிக்கும் வண்ண மீன்கள்

*மூடும் அபாயத்தில் மீன் பண்ணைகள்

வத்தலக்குண்டு : வத்தலகுண்டு அருகே வண்ண மீன்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றன. இதனால் மீன் பண்ணைகள் மூடும் அபாயத்தில் உள்ளன. வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் சுமார் 100 மீன் பண்ணைகள் உள்ளன. விவசாயத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தால் விவசாயிகள் பலர் மீன் பண்ணைகள் நடத்தி வருகின்றனர். இந்த மீன் பண்ணைகளில் ப்ளூம் மாப்பு, மாப்பு ஆரஞ்சும், ஆப்பு கோபுர எல்லோ கப்பிஸ் மற்றும் வாஸ்து மீன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வகையான மீன்கள் வளர்க்கப்படுகின்றன. மீன்கள் வளர்ந்ததும் அவற்றை கேரளா, சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.

மீன் பண்ணையாளர்கள் தொடர்ந்து மீன் பண்ணை நடத்த விரும்புகின்றனர். ஆனால் விருவீடு பகுதியில் போதிய மழை இல்லாததால் கண்மாய்கள் அனைத்தும் வறண்டு போய்யுள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் ஓரளவு பெறப்பட்டுள்ள நீர் ஆதாரத்தை வைத்து மீண்டும் இப்பகுதிகளில் மீன் பண்ணைகள் தாக்குப்பிடித்து வருகின்றன. தொடர்ந்து மழை இல்லையென்றால் மீன் பண்ணைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். ஆகையால் பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டுள்ள 58 கால்வாய் மூலம் வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து விருவீடு பகுதியில் உள்ள கண்மாய்களை நிரப்பினால் அனைத்துப் பகுதியும் ஊற்றெடுக்க ஆரம்பித்து விடும்.

வைகை அணையில் தற்போது நீர்மட்டம் 60 அடியை தாண்டி விட்டதால் மீன் பண்ணையாளர்கள் மற்றும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கையை ஏற்று 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி மீன் பண்ணை நடத்தி வரும் அசோக் கூறுகையில், ‘இப்பகுதி விவசாயிகளான நாங்கள் விவசாயத்தை விட்டுவிட்டு மீன்பண்ணை வைத்தோம். இப்போது மீன் பணியை விட்டுவிட்டு எங்கு போவது என்று தெரியவில்லை. தமிழக அரசு 58ம் கால்வாயில் தண்ணீரை திறக்க வேண்டும்’ என்றார்.


Tags : Color Fishes ,Vattalakundu ,Batlagundu ,Fish Farms , Batlagundu ,Color fishes,Fish Farms ,water
× RELATED தமிழர்களை அடிக்கடி கேலி செய்த வடமாநில...