×

கொள்ளிடம் பகுதியில் தண்ணீரின்றி கருகும் 22,000 எக்டேர் சம்பா பயிர்

கொள்ளிடம் :கொள்ளிடம் பகுதியில் தண்ணீரின்றி சம்பா நெற்பயிர் கருகுவதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் கடைமடை பகுதியாகும். மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு ஒரு மாதகாலமாகியும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. கொள்ளிடம் ஒன்றியத்தை சேர்ந்த 42 ஊராட்சிகளில் சுமார் 22 ஆயிரம் எக்டேர் விளை நிலங்களில் நேரடி விதைப்பு மற்றும் சம்பா நடவுப்பயிர் செய்யும் முயற்சியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஆனால் கடைமடை பகுதியான கொள்ளிடம் பகுதிக்கு பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேரவில்லை. சில தினங்களுக்கு முன் அவ்வப்பொழுது பெய்த மழையை வைத்து உழவுப்பணியை மேற்கொண்ட விவசாயிகள் போதிய தண்ணீர் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து நேரடி விதைப்பு செய்தனர்.மேட்டூரிலிருந்து தண்ணீர் பாசனத்திற்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். பாசனத்திற்கு தண்ணீர் வாய்க்கால்களில் வந்து சேரவில்லை. பிரதான பாசன வாய்க்கால்களில் மட்டுமே சென்ற தண்ணீர் கிளை வாய்க்கால்களில் வரவில்லை. காரணம் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை.

கடை மடைப்பகுதியான கொள்ளிடம் பகுதிக்கு தண்ணீர் இதுவரை வந்து சேராததால் சம்பா நெற்பயிர் முழுவதும் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி செலவு செய்து நேரடி விதைப்பு செய்த விவசாயிகளின் குடும்பங்கள் தற்பொழுது வேதனையில் உள்ளது. கொள்ளிடம் கடைமடை பகுதியான மகேந்திரப்பள்ளி காட்டூர், செம்மங்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு பாசன வசதி தரும் கோட்டை வாய்க்கால், பெரியவாய்க்கால், தைத்தான் வாய்க்கால், குழாயடிவாய்க்கால், செம்மங்குடிவாய்க்கால் உள்ளிட்ட அனைத்து கிளை வாய்க்கால்களும் தூர்வாராததால், தண்ணீர் பாசனத்திற்கு இதுவரை வந்து சேரவில்லை.

இதுகுறித்து மகேந்திரப்பள்ளி பாசனதாரர் சங்கத்தலைவர் ராஜாராமன் கூறுகையில், மகேந்திரப்பள்ளி ஊராட்சியில் மட்டும் 600 எக்டேர் நிலத்தில் மேட்டூர் தண்ணீரை நம்பி விவசாயிகள் நேரடி விதைப்பு செய்திருந்தோம்.
மேட்டூரிலிருந்து திறந்து விடப்பட்ட தண்னீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே வீணாக சென்று கடலில் கலந்தது. ஆனால் பாசனத்திற்கு இதுவரை வந்து சேரவில்லை. தண்ணீரின்றி 600 எக்டேர் சம்பா விதைப்பு பயிர் கருகி வருகிறது.இனிமேல் பயிரை காப்பாற்றுவது சிரமம்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் தண்ணீர் பாசனத்திற்கு இதுவரை வரவில்லை. இதேநிலை தொடர்ந்தால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. விவசாயிகளின் நலன் கருதி உடனே கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்து விடவும், கிளை வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர் வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Area Samba , water,dried, kollidam,Samba crop
× RELATED தமிழகத்தில் 2 நாட்களுக்கு 5 டிகிரி...