×

குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட கைதிகளை 11,12 தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விலக்கு வேண்டும் : மாநகர காவல் ஆணையர் கடிதம்

சென்னை: சென்னை புழல் சிறையில் உள்ள விசாரணை கைதிகளை அக்டோபர் 10,11,12 ஆகிய தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை காவல் துறை சார்பாக விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் தான் எழுதியுள்ள கடிதத்தில், பிரதமர், சீன அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் அதிக காவலர்கள் ஈடுபட உள்ளனர். போதிய காவலர்கள் இல்லாததால் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வர முடியாது. எனவே அக்டோபர் 10,11,12 ஆகிய தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விலக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜீ ஜின்பிங் 11ம் தேதி (நாளை)  சென்னை வருகிறார். 12ம் தேதியும் மாமல்லபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு தமிழக தலைநகரான சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.  இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள், தீவிரவாதிகள் ஒழிப்பு குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர்.இந்நிலையில் சீன அதிபர்  பிரதமர் மோடி சந்திப்பை முன்னிட்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மாமல்லபுரம், சென்னையில் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 16 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் கடிதம்

இந்த நிலையில் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதிக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் கடிதம் அனுப்பியுள்ளார்.  அந்த கடிதத்தில்  10 , 11 ,  12 ஆகிய தேதிகளில் முக்கிய வழக்குகளில் ஆஜர் படுத்தக் கூடிய விசாரணை கைதிகளை மட்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும். அதே போல பிற வழக்குகளில் அன்றைய தின விசாரணையில் இருந்து கைதிகளுக்கு விலக்கு அளித்து , அன்றைய தேதி வழக்குகளை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது  குறிப்பாக ஒரு குற்றவாளி தேடப்படும் போதும், விசாரணைக் கைதியை நீதிமன்றத்தில் அழைத்து வரும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக் கூடிய சூழல் உருவாகும் போதும்  இந்த மாதிரி வீடியோ கான்பரன்ஸ் விசாரணை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Prisoners ,court ,Municipal Police Commissioner , Municipal Police Commissioner, AK Viswanathan, Letter, Offender, Prison, Police
× RELATED வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு...