சென்னை: கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் பகுதியில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. வடமாநிலத்தவர், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு வாடகைக்கு குடிருயிக்கின்றனர். இந்நிலையில், இந்த குடியிருப்புக்கு நேற்று முன்தினம் மாலை 2 நைஜீரிய வாலிபர்கள் வந்து, வாடகைக்கு வீடு கிடைக்குமா என காவலாளியிடம் கேட்டுள்ளனர். அவர், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகியிடம் கேட்குமாறு கூறி, உள்ளே அனுப்பி வைத்தார். அங்கு, ஆறுமுகம் என்பவரை சந்தித்து கேட்டுள்ளனர். ‘உங்களது பாஸ்போர்ட், விசா விவரங்களை தந்தததால், உங்களுக்கு வீடு வாடகைக்கு கிடைக்கும் என்று ஆறுமுகம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள், ‘பாஸ்போர்ட் இல்லை என்றும், இங்கு ஒரு கல்லூரியில் படிப்பதாகவும், பகுதி நேர வேலை செய்வதாகவும் முரணாக கூறினர்.இதனால், சந்தேகமடைந்த ஆறுமுகம், கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் ெகாடுத்தார்.
இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 2 நைஜீரிய வாலிபர்களை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அவர்கள் நைஜீரியா நாட்டின் அகோமயே ஜாஷி நெரும்பல் (27), பாரெல் பிமெயாஜுட்டாலா யாப்தா (27) என்பது தெரியவந்தது. இவர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் படிப்பதற்காக வந்து, பின்னர் விசா காலம் முடிந்தும் இங்கேயே தங்கிவிட்டதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் மீது மதுரவாயல் காவல் நிலைய எல்லையில் இருந்தபோது, திருட்டு பைக்கை வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டதும், வழக்கு விசாரணையில் இவர்களது பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இல்லாமலும், விசா நீட்டிக்காமலும் இருந்ததால் அவர்களை சென்னை போலீசாரிடம் ஒப்படைக்க கேளம்பாக்கம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.