சென்னை: வக்கீல்களுக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1,547 வக்கீல்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அகில இந்திய பார்கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே வக்கீல்களாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியும். இதையடுத்து, தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பார்கவுன்சிலில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் இந்திய பார்கவுன்சில் அறிவித்திருந்தது. கடந்த 2010 ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும். இதுவரை தமிழகத்தில் 30 ஆயிரம்பேர் இந்த தகுதித் தேர்வை எழுதியுள்ளனர்.
சட்டப்படிப்பை முடித்து பார்கவுன்சிலில் பதிவு செய்த இரண்டு ஆண்டுகளில் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுக்கு 2 முறை இந்த தகுதி தேர்வு நடத்தப்படும். இந்த வகையில் நடந்த தகுதித் தேர்வில் குறித்த கால அவகாசத்திற்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,547 வக்கீல்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீசில், சஸ்பெண்ட் நடவடிக்கையை தவிர்க்க தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களை பார்கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.