திருவனந்தபுரம்: கேரளாவில் சொத்துக்காக கணவன் உள்பட 6 பேரை கொலை செய்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததுடன் பலமுறை கருக்கலைப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் வருமாறு:கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியை சேர்ந்தவர் ராய் தாமஸ். இவரது மனைவி ஜோளி. கடந்த 2002 முதல் 2016 ஆண்டுக்கு உள்பட்ட காலகட்டத்தில் ஜோளி தனது கணவர் ராய்தாமஸ், மாமனார் டோம் தாமஸ், மாமியார் அன்னம்மா உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்தார். இதன்பின்னர் சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி கொண்டார்.
அமெரிக்காவில் இருந்து ராய்தாமசின் அண்ணன் ரோஜோ சமீபத்தில் ஊருக்கு வந்தபோது ஜோளியின் பெயருக்கு சொத்துக்கள் அனைத்தும் உயில் எழுதப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தந்தை எழுதி கொடுத்த உயில் மற்றும் குடும்பத்தினர் 6 பேரின் அடுத்தடுத்த சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.இதில் கணவன் உள்பட 6 பேரையும் சொத்துக்காக உணவில் சயனைடு கலந்து ஜோளி படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஜோளியை கைது செய்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின்படி சயனைடு சப்ளை செய்த உறவினர் மேத்யூ, நகை தொழிலாளி பிரஜூகுமாரை கைது செய்தனர்.
இந்த கொலையில் ஜோளியின் 2வது கணவன் ஷாஜி மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் அவரை பிடித்து விசாரித்துவிட்டு விடுவித்தனர்.இதற்கிடையே ஜோளி, கோழிக்கோட்டில் உள்ள என்ஐடி பேராசிரியையாக பணிபுரிந்து வருவதாக கூறி வந்துள்ளார். இவரது முதல் கணவன் ராய்தாமஸ், 2வது கணவன் ஷாஜூ உள்பட குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் என்ஐடியில் பணிபுரிந்து வருவதாகவே நம்பியுள்ளனர். இவர்களை நம்ப வைப்பதற்காகவே தினமும் காலையில் வேலைக்கு செல்வதாக கூறி செல்வாராம். மாலையில் வீடு திரும்புவார். ஜோளி கைதாகும் வரை என்ஐடி பேராசிரியை என்றே நம்பி வந்து உள்ளனர்.
நேற்று முன்தினம் போலீசார் 2வது கணவன் ஷாஜூவிடம் கேட்டபோது தினமும் காலையில் கார் அல்லது பைக்கில் ஜோளி வேலைக்கு செல்வதாக கூறி செல்வார். சில நாள்கள் மதியமே வீடு திரும்புவார். அடிக்கடி போன் வரும். அப்போது பேராசிரியை போலவே பேசுவார். இதனால் நானும் நம்பி விட்டேன். எனக்கும் பணம் தேவை இல்லாததால் அவரது சம்பளம் குறித்து கேட்கவில்லை. அவர் என்னையும், கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாமோ? என்ற சந்தேகம் எனக்கு இப்போது ஏற்பட்டு இருக்கிறது என்று கூறி உள்ளார்.
இதனிடையே போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஜோளிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருக்கலாமோ? என்ற சந்தேகம் வலுத்து உள்ளது. இதேபோல் பலமுறை கருக்கலைப்பு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று 2வது கணவன் ஷாஜூ கூறிவிட்டதாக தெரிகிறது. இது குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கோழிக்கோடு எஸ்பி சைமன் கூறியது: ஜோளி மேலும் பலரை கொல்ல திட்டமிட்டு உள்ளார். விசாரணையின் போது தனக்கு பெண்களை பிடிக்காது என்று கூறி உள்ளார். இதனால் தான் மாமியார் அன்னம்மா, 2வது கணவன் ஷாஜூவின் மனைவி சிலி, அவரது மகள் ஆல்பைன் ஆகியோரை கொலை செய்துள்ளார். உறவினர்களான மேலும் 5 பெண்களையும் கொலை செய்ய முயற்சித்து உள்ளார். இக்கொலை சம்பவத்தில் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுகள் அடுத்தடுத்து அவிழ்க்கப்பட்டு விடும் என்று போலீசார் தெரிவித்தனர்.
அரசியல் பிரமுகர், அதிகாரிக்கு தொடர்பு:
ஜோளிக்கு தாமரைச்சேரி பகுதியை சேர்ந்த சிபிஎம் செயலாளர் மனோஜ், ஒரு தாசில்தார் ஆகியோர் போலி உயில் தயாரிக்க உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராய்தாமசின் உறவினர் பிளம்பர் பிச்சுண்ணி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திடீரென இறந்தார். இவர் ராய்தாமஸ் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவாராம். கடந்த 2011ல் ராய்தாமஸ் இறந்தார். அப்போது அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று பிச்சுண்ணியும் போலீசில் புகார் செய்து இருந்தார்.
காங். பிரமுகர் சாவில் தொடர்பு?:
கோழிக்கோடு அருகே சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ராமகிருஷ்ணன் சாவிலும் ஜோளிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது. இது தொடர்பாக அவரது மகன் ரோஹித் கொடுத்த புகாரில், ‘’எனது தந்தை ராமகிருஷ்ணனும், அழகு நிலையம் நடத்திவரும் சுலைகா, அவரது கணவன் மஜீத்துக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தது. கடந்தாண்டு எனது தந்தைக்கு சொந்தமான 5.50 ஏக்கர் நிலத்தை ரூ.55 லட்சத்துக்கு விற்றார். இந்த பணம் எனது தந்தையின் கைக்கு வரவில்லை. இந்த பணத்தை சுலைகா, அவரது கணவன் ஆகியோர் பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. சுலைகாவுக்கும், ஜோளிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.எனது தந்தையை ஜோளி கொன்றிருக்கலாமோ? என்று சந்தேகம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.