மதுரை: மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் 1.05 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு ஒரு போக பாசனத்திற்காக இன்று காலை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பெரியாறு கால்வாயில் இருந்து ஒரு போக பாசனப் பகுதிக்கு தண்ணீர் திறக்க கோரி, மதுரை மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, 9ம் தேதி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள 98 ஆயிரத்து 764 ஏக்கருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 199 ஏக்கருக்கும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 6 ஆயிரத்து 39 ஏக்கர் என மொத்தம ்ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் ஒரு போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று காலை விநாடிக்கு 1,130 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
அணை திறப்பு நிகழ்ச்சியில் தேனி கலெக்டர் பல்லவி பால்தேவ், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் செல்வம் மற்றும் மதுரை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அணையில் இருந்து தண்ணீர் வெளியேறிய போது, விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். தொடர்ந்து, மதுரை கள்ளந்திரியில் உள்ள பெரியார் கால்வாயில் இருந்து மேலூர் மற்றும் சிவகங்கை வரையிலான பாசன பகுதிகளுக்கும் அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது.