×

வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக சிவகங்கையில் வயலில் இறக்கி நாற்று நட்ட மழலைகள்

சிவகங்கை: வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் வயலில் இறங்கி நாற்று நட்டனர். சிவகங்கையில் உள்ள மௌண்ட் லிட்டிரா ஜி என்ற தனியார் பள்ளியில் பாடதிட்டத்துடன் சேர்ந்து வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தையும் அதன் பணிகளையும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக கண்டுபட்டி கிராமத்தில் உள்ள இயற்கை வேளாண் பண்ணைக்கு பள்ளி சார்பில் அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள் வயல்வெளியில் இறங்கி பயிரிடப்பட்ட செடிகளை பார்வையிட்டனர். அதன் பிறகு ஆடுகள் வளர்க்கும் பண்ணைக்கு சென்ற மாணவர்கள், ஆடுகளுக்காக அமைக்கப்பட்டிருந்த பட்டி குறித்தும், அவைகளுக்கு அளிக்கப்படும் உணவுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். அதனை தொடர்ந்து விவசாய நிலத்திற்கு வந்த மாணவர்கள் வயலில் டிராக்டர் உழுது கொண்டிருப்பதை பார்வையிட்டனர்.

அதன் பின்னர் நடவு செய்யப்படவுள்ள நெற்பயிரின் நாற்று கட்டிற்கு நடத்தப்பட்ட பூஜையில் மாணவர்கள் தங்களையும் ஈடுபடுத்தி கொண்டனர். இதை தொடர்ந்து பூஜை முடிந்த நிலையில் நாற்றுகளை பெற்றுக் கொண்ட மாணவர்கள் அங்கு பணிபுரியும் பெண்களின் உதவியுடன் வயலில் இறங்கி தங்களுடைய பிஞ்சி கைகளால் நெல் நாற்றுகளை நடவு செய்தனர். இறுதியாக சம்பங்கி, வாழை, கொய்யா, கடலை ஆகிய பயிர்களின் விதைப்பு முதல் அறுவடை காலம் வரையிலான செயல்முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன. பாடதிட்டத்துடன் வேளாண் குறித்து கற்றுக்கொள்வது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், வரும் காலத்தில் வேளாண் தொழிலை மீட்டெடுக்க தாங்கள் முயற்சிப்போம் என்றும் மழலை குரலில் மாணவர்கள் தெரிவித்தனர்.


Tags : Agricultural Industry Sivaganga ,The Importance of Agriculture , Agriculture, Sivaganga, Field, Seedling, Rainforest
× RELATED ‘தனி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு...