நியூயார்க்: ஐநா சபையில் கடுமையான நிதிப் பற்றாக்குறை நிலவுவதால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, அதன் பொதுச்செயலாளர் கட்டரஸ் கவலை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 2018-19ம் ஆண்டுக்கான வரவு செலவு 5.4 பில்லியன் டாலராகும். இதில், அமெரிக்கா தனது பங்காக 22 சதவீத நிதியை ஐநா.வுக்கு வழங்கியுள்ளது. இந்த நிலையில், ஐநா சபையில் கடுமையான நிதிப் பற்றாக்குறை நிலவுவதாகவும், அதை சீரமைக்க உறுப்பு நாடுகள் உதவ வேண்டும் என்றும் ஐநா பொதுச் செயலாளர் அன்டனியோ கட்டரஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது பற்றி நேற்று அவர் அளித்த பேட்டியில் ‘ஐநா சபையில் 230 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி பற்றாற்குறை நிலவுகிறது. இந்த மாத இறுதிக்குள் பணம் இல்லாத நிலை ஏற்படும். 37 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இதை சரிசெய்ய உறுப்பு நாடுகள் உதவ வேண்டும்’ என்றார்.