புதுடெல்லி: நிதி நெருக்கடி முற்றி வருவதால் சமாளிக்க முடியாமல் திணறும் பிரபல பன்னாட்டு வங்கி எச்எஸ்பிசி, 10,000 பணியிடங்களை நீக்க முடிவு செய்துள்ளது. எச்எஸ்பிசி வங்கியில் பல நாடுகளிலும் சேர்த்து மொத்தம் 2,37,685 பேர் முழு நேர பணியாளர்களாக பணியாற்றுகின்றனர். ஊழியர்கள் குறைப்பு உட்பட பல சிக்கன நடவடிக்கைகளை எடுப்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இது தொடர்பாக வங்கியின் தலைவர் மார்க் டஸ்கருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தான் தலைமை செயல் அதிகாரி ஜான் பிலின்ட் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வங்கி நிர்வாகத்தில் இருந்து திடீரென விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போரால் சர்வதேச அளவில் வங்கியின் நிதிக்கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.
சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக எச்எஸ்பிசி வங்கிக்கு ஹாங்காங் சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஏற்கனவே, எச்எஸ்பிசி குழுமத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஸ்டூவர்ட் குலிவர் கடந்த2011 ல் பொறுப்பு ஏற்றபோது, வங்கியில் இருந்து சுமார் 30,000 பேரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இப்போது நிலைமை முற்றி வருவதால் வங்கி நிர்வாகம் அதிரடியாக சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 3.5 பில்லியன் டாலர் செலவுகளை குறைக்க வேண்டும் என்பதால் 10 ஆயிரம் பணியிடங்களை குறைத்து அதற்கான ஊழியர்களை நீக்க முடிவு செய்யப்பட உள்ளது. காலாண்டு அறிக்கை வெளியிட்ட பின் இந்த அதிரடி நடவடிக்கையை வங்கி உறுதி படுத்தும் என்றும் தெரிகிறது.