சென்னை: நடிகர் சங்கத்துக்கு சங்க பதிவாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் மாதம் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க தேர்தல் நடந்தது. இதில் நாசர், விஷால் தலைமையிலான ஒரு அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான அணியும் போட்டியிட்டன. தேர்தல் நடந்து முடிந்த நிலையில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு முடியும் வரை ஓட்டு எண்ணிக்கை நடத்த தடை விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் நடிகர் சங்கத்திற்கு சங்கங்களின் பதிவாளர் ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் கடந்த சில மாதங்களாக சங்கம் செயல்படாமல் இருப்பதால் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து நடிகர் பூச்சி முருகன் அளித்துள்ள பேட்டி: கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி முறைப்படி நடிகர் சங்க தேர்தல் நடந்தது. நீதியரசர் பத்மநாபன் தேர்தல் நடத்தினார். விஷால் தலைமையில் போட்டியிட்ட அணியில் நானும் துணை தலைவருக்கு போட்டியிட்டேன். வரும் 15ம் தேதி வழக்கு முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் நடிகர் சங்கத்துக்கு சங்க பதிவாளர் அனுப்பி உள்ள நோட்டீஸில் நடிகர் சங்கம் கடந்த ஒரு மாதமாக சரியாக செயல்படவில்லை, ஏன் சங்கத்தை தனி அதிகாரி நியமித்து நடத்தக்கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது. பழைய அணியினரே ஜெயித்து விடுவோம் என்பதால் அதை தடுக்கவே தடைகளை போட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக சங்கம் செயல்படவில்லை என்கிறார்கள்.
ஆனால், கடந்த 3 மாதமாக சங்கம் நன்றாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஷூட்டிங் நடக்கிறது, வங்கியில் பணம் ெடாபசிட் செய்கிறோம். கடந்த மாதம் வரை பென்சன் தந்திருக்கிறோம். நடிகர்கள் பிரச்னையை எழுத்து மூலமாக வாங்கி அதற்கு பதில் அளித்து வருகிறோம். தவறான கண்ணோட்டத்தில் தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதற்கு நாங்கள் நீதிமன்றம் செல்வோம். இவ்வாறு பூச்சி முருகன் கூறி உள்ளார்.