×

திமுக ஆட்சி அமைந்தவுடன் வன்னியர் சமுதாய தலைவர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக ஆட்சி அமைந்தவுடன், இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கும், வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவரான ஏ.கோவிந்தசாமிக்கும் மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ெவளியிட்ட அறிக்கை: திமுக, வன்னியர் சமுதாய மக்களுக்கு பல சாதனைகளையும், எண்ணற்ற திட்டங்களையும் தீட்டி- அவர்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டிருக்கிறது. ஆனால், “கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று நடத்திய போராட்டங்களை எள்ளி நகையாடியதோடு மட்டுமின்றி, அந்தப் போராட்டங்களை கைது நடவடிக்கைகள் மூலம்- துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கிட நினைத்தவர்கள் அதிமுக ஆட்சியாளர்கள் என்பதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள்.

போராட்டக்களத்தில் நின்றவர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் மதித்துப் போற்றிடும் வகையில், மூன்றாவது முறையாக முதலமைச்சரானவுடன் 28.3.1989 அன்று வன்னிய சமுதாயத்தினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு அளித்து அரசு ஆணை வெளியிட்டதோடு மட்டுமின்றி- அவர்களை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கலைஞர் தான்.
இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகளாக அங்கீகரித்து, அவர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ‘பென்ஷன்’அறிவித்தார். சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மொழிப் போர்த் தியாகிகளுக்கு இணையாக அளிக்கப்பட்ட அந்த அங்கீகாரத்தின் விளைவாக, இன்றுவரை அந்தக் குடும்பங்களுக்கு பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது.

வன்னியர் சமுதாயத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு, சென்னை-கிண்டி ஹால்டா சந்திப்பில் முழு உருவச் சிலை அமைத்து, அதனைத் திறந்து வைத்தவர் தலைவர் கலைஞர் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.  
அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த அந்தத் தியாகிகளுக்கு மணி மண்டபம்  அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அரசு செவி கொடுத்தேனும் கேட்டதா? இல்லவே இல்லை. ஆனால் இன்றைக்கு ஒரு உறுதிமொழியை நான் இந்த அறிக்கை வாயிலாக அளிக்க விரும்புகிறேன். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்தவுடன், வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்திலேயே மணி மண்டபமும், வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராகவும், பேரறிஞர் அண்ணா அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராகவும்,  கலைஞர் அமைச்சரவையில் உணவு மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி மறைந்த, “ஏஜி”என அறிஞர் அண்ணாவால் அன்புடன் அழைக்கப்பட்ட, ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபமும் அமைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே, தலைவர் கலைஞர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து திமுக அரசு  அமைந்ததும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி,உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் இந்த நேரத்தில் உறுதியளிக்க விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கவிஞர் முடியரசன் நூற்றாண்டு விழா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

திராவிட இயக்கத்தின் வீறுமிக்க கவிஞரும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைப் பரம்பரை எனப் போற்றப்படும் கவிப்பட்டாளத்தில் முக்கியமானவருமான கவிஞர் முடியரசன் நூற்றாண்டு விழா காரைக்குடியில் சிறப்பான முறையில் நடைபெறுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியில் கவிஞர் முடியரசன் எழுதிய கவிதைகளில் அனல் தெறிக்கும். தலைவர் கலைஞருடன் பங்கேற்ற கவியரங்க மேடைகளில் தமிழ் மணக்கும்.  தன் படைப்புகளால் தமிழ் உணர்வினை ஊட்டிய கவிஞர் முடியரசனின் எழுச்சி மிக்க வரிகள் ஆதிக்க மொழிகளிடமிருந்து அன்னைத் தமிழினைக் காக்க இன்றும் கூர் மழுங்கா ஆயுதமாகப் பயன்படுகிறது. நூற்றாண்டு காணும் கவிஞர் முடியரசனாரின் புகழ் தமிழ் போல நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.

Tags : community leader ,Govindasamy ,Vanniyar ,formation ,DMK ,MK Stalin , Vanniyar Community Leader Govindasamy,Stalin
× RELATED தொழிலாளி கொலையில் 3 பேர் கைது