சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: கீழடி நாகரிகமானது தமிழர்களின் பண்டைய நகர நாகரிகத்தை உலகிற்கு வெளிக்கொண்டு வந்துள்ளது. 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகமாக நிலவியது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இது தமிழர்களின் பெருமை மிகு வரலாற்றிற்கு சான்றாக விளங்குகிறது. எனவே இந்த வரலாற்று தொல்லியல் ஆய்வுகள்முழுமையாக வெளிக்கொண்டுவர வேண்டும்.
உலகம் முழுவதும் தொல்லியல் ஆய்வுகள் நடக்கின்ற இடத்தில் கிடைக்கும் பொருட்களை சேகரித்து அந்த இடத்திற்கு அருகிலேயே அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்பது யுனெஸ்கோ வழிகாட்டுதல் ஆகும். அதைப் பின்பற்றியே உலகம் முழுவதும் தொல்லியல் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுகின்றன. இதை இந்திய அரசு தொல்லியல் ஆய்வு நிறுவனமும் செயல்படுத்தி வருகிறது. இந்த அடிப்படையில் கீழடியில் சேகரிக்கப்பட்ட அனைத்து தொல்லியல் பொருட்களையும் ஒரே இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட வேண்டும். அந்த அருங்காட்சியகம் கீழடியிலேயே அமைய வேண்டும்.