×

பிரான்சிடம் இருந்து இந்தியாவுக்கு முதல் ரபேல் போர் விமானம் ஒப்படைப்பு : ஆயுத பூஜை செய்து பெற்றுக் கொண்டார் ராஜ்நாத் சிங்

பாரிஸ்: பிரான்ஸ் அரசு முதல் ரபேல் போர் விமானத்தை முறைப்படி இந்தியாவிடம் நேற்று ஒப்படைத்தது. இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை நவீன ஏவுகணைகளுடன் ₹59 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் 3 ஆண்டுக்கு முன் ஒப்பந்தம் போடப்பட்டது. 36 விமானங்களும் பறக்கும் நிலையில் வாங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 4 விமானங்களை வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் முதல் விமானம் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. முதல் விமானத்தை பெற்றுக்கொள்ள  பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் பாரிஸ் சென்றடைந்தார். அவர் நேற்று எலைசீ மாளிகையில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து, முதல் ரபேல் விமானத்தை பெற்றுக் கொள்ள அவர் துறைமுக நகரான போர்டியக்சின் புறநகரான மேரிக்னாக் பகுதிக்கு சென்றார்.

அங்கு, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய முதல் ரபேல் போர் விமானம் முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரான்சின் ராணுவ உயர் அதிகாரிகள், டசால்ட் நிறுவன மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விமானத்தை பெற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங், அதற்கு ஆயுத பூஜை நடத்தினார். மேலும், இந்திய விமானப் படையின் 87வது நிறுவன நாளில் ரபேல் விமானம் ஒப்படைப்பட்டிருப்பதும் சிறப்பம்சமாகும்.
பின்னர், அமைச்சர் ராஜ்நாத் சிங் ரபேல் விமானத்தில் பயணித்து அதன் திறனை நேரடியாக ஆய்வு செய்தார்.

முதல் ரபேல் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப் பட்டாலும், முதற்கட்டமாக வழங்கப்படும் 4 விமானங்களுடன் சேர்த்து அடுத்த ஆண்டு மே மாதம்தான் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும். 2022ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதிக்குள் 36 விமானங்களும் வழங்கப்படும். இவ்விமானம் வான் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கக் கூடியது. விமானம் ஒப்படைப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பாரிசில் இந்தியா, பிரான்ஸ் பாதுகாப்பு துறையின் ஆண்டு கூட்டத்தில் ராஜ்நாத் பங்கேற்றார். இதில், பிரான்ஸ் ஆயுத படை அமைச்சர் புளோரன்ஸ் பார்லேவுடன் இருதரப்பு பாதுகாப்பு உறவு குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

* ரபேல் விமானங்கள் மணிக்கு 2,130 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டவை. இயல்பாக 1,912 கிமீ வேகத்தில் பறக்கும். இதனால் எதிரிகளால் ஏவுகணைகளை வீசி தகர்ப்பது சிரமம்.
* ஒருமுறை முழு எரிபொருள் நிரப்பினால் 3,700 கிமீ தூரம் வரை பயணிக்கும்.
* எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் எளிதாக தப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டவை.
* பைலட்டுக்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் வசதிகள் உள்ளன.
* அணு ஆயுதங்களையும் இதில் கொண்டு செல்ல முடியும்.
* விமானத்திலிருந்து 560 கிமீ தூரத்தில் இருக்கும் தரை இலக்கை தகர்க்க முடியும். இதனால் எதிரியின் எல்லையில் நுழையாமலே தாக்குதல் நடத்தலாம்.
* தற்போது விமானப்படையில் ரஷ்யாவின் சுகோய் 30 ரக விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு ரபேல் விமானம் 2 சுகோய் 30 விமானங்களுக்கு சமமாகும்.

Tags : Rajnath Singh ,arms mantle ,France ,India ,Rafael , first Rafael fighter flight ,France to India,Rajnath Singh puja
× RELATED உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன்...