×

இதுவரை இல்லாத அனுபவமாக இருந்தது: ரஃபேல் விமானத்தில் பறந்த பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி

பாரிஸ்: பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பறந்தார். பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்திடம் அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரஃபேல் ரக  போர் விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதனை பெற்றுக் கொள்வதற்காக பிரான்ஸ் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்நாட்டு அதிபர்  மெக்ரானை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாரீஸ் நகரில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது , இருநாட்டு பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் விதமாக  இந்த சந்திப்பு அமைந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டின் மெரிக்னா நகரில் நடைபெற்ற விழாவில் இந்தியாவுக்கான  முதல் ரபேல் போர் விமானம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முறைப்படி  ஒப்படைக்கப்பட்டது.

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் விமானத்திற்கு சந்தனம், பொட்டு வைத்து பூஜை செய்யப்பட்டது. அதேபோல், விமானத்தின் மீது தேங்காய், பூக்கள் வைத்தும் முன்பகுதியில் ஓம் என்று இந்தியில் மத்திய பாதுகாப்ப]த்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் எழுதினார். விமானத்திற்கு கயிறு கட்டிய பின்னர் டயர்களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து பாரீஸ் அருகே உள்ள மெரினாக் விமானப்படை தளத்தில் இருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட  முதல் ரஃபேல் போர் விமானத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 25 நிமிடம் பறந்தார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா - பிரான்ஸ் உறவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம் என தெரிவித்தார். இரு முக்கிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே அனைத்துத் துறைகளிலும்   ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் என்றும் ரஃபேல் விமானத்தின் செயல்பாடுகளைக் காண ஆர்வமாக உள்ளேன் என்றார். இந்திய விமானப்படைக்கு இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள் என்றும் இந்தியா - பிரான்ஸ் இடையே ஆழமான நட்பை   ரபேல் விமானம் கொள்முதல் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார்.

ரஃபேல் விமானத்தின் விநியோகம் திட்டமிடப்பட்டிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இது எங்கள் விமானப்படைக்கு மேலும் பலம் தரும் என்று நான் நம்புகிறேன் என்றார். ரஃபேல் என்பது ஒரு பிரெஞ்சு சொல், அதாவது காற்றின் வாயு   என்று பொருள். விமானம் அதன் பெயருக்கு ஏற்ப வாழும் என்று நான் நம்புகிறேன். பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரஃபேல் இந்தியாவின் விமான ஆதிக்கத்தை அதிவேகமாக உயர்த்தும் என்று நான்   நம்புகிறேன் என்றார்.

ரஃபேல் விமானத்தில் பயணித்தப்பின் பேட்டியளித்த ராஜ்நாத் சிங், ரஃபேல் போர் விமானத்தில் பயணித்தது, இதுவரை இல்லாத அனுபவமாக இருந்தது. விமானம் மிகவும் வசதியாகவும், மென்மையாகவும் உள்ளது என்றார். மேலும், போர்  விமானத்தில் சூப்பர் சோனிக் வேகத்தில் பயணிப்பேன் என நினைத்து பார்த்ததில்லை என்றார். பிப்ரவரி 2021 க்குள், 18 ரஃபேல் விமானங்களை நாங்கள் பெறுவோம், ஏப்ரல்-மே 2022 க்குள் அனைத்து 36 விமானங்களையும் பெறுவோம்.
இது நமது தற்காப்பின் ஒரு பகுதியாகும், யாருக்கும் எதிரான ஆக்கிரமிப்பின் அடையாளம் அல்ல. இது ஒரு தடுப்பு என்றார்.

ரஃபேல் விமானத்தின் சிறப்பு அம்சங்கள்

*இரட்டை இன்ஜின் கொண்ட அதிநவீன போர் விமானமான ரஃபேல் வானிலிருந்து பூமியில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட நவீன போர் விமானம் ஆகும்.

*இந்த விமானத்தில் உலகின் மிக சக்தி வாய்ந்த ஏவுகணைகளான ஸ்கால்ப் மற்றும் ஸ்டார்ம் ஷேடோ உள்ளிட்ட ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும். அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ஏவுகணைகள் 4 பிளஸ் பிளஸ் தலைமுறை  ஏவுகணைகளாகும்.

*இவை குகைக்குள் பதுங்கியிருக்கும் எதிரிகளை அழிக்க கடினமான பாறையையும், ஊடுருவி தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

*சக்திவாய்ந்த போர் கருவிகள், ஏவுகணைகளை பொருத்தி பயன்படுத்த ஏற்றது என்பதால் இந்திய ராணுவத்திற்கு இவை பலம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Tags : Rajnath Singh ,Rafael ,Flying Rafale ,Interview ,fighter , Interview with Defense Minister Rajnath Singh after flying Rafale fighter
× RELATED ரூ.39,125 கோடிக்கு ஏவுகணைகள் போர்விமானங்கள் வாங்குகிறது இந்தியா