×

பராமரிப்பு பணி முடிந்து பயன்பாட்டிற்கு வந்த பழநி கோயில் ரோப்கார்: பக்தர்கள் மகிழ்ச்சி

பழநி: பராமரிப்பு பணி முடிந்து பழநி கோயில் ரோப்கார் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலைமீது செல்வதற்கு வசதியாக தெற்கு கிரிவீதியில் இருந்து கடந்த 2004ம் ஆண்டு முதல் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரோப்காரின் பயணம் நேரம் 3 நிமிடம் ஆகும். 1 மணி நேரத்தில் சுமார் 400 பேர் பயணிக்கலாம்.

இந்த ரோப்கார் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. சுமார் 70 நாட்கள் நிறுத்தப்பட்ட ரோப்காரில் பெட்டிகளில் உள்ள பழுதுகள் நீக்கப்பட்டது. தொடர்ந்து கீழ் மற்றும் மேல்தளங்களில் உள்ள பற்சக்கரங்கள், பழுதடைந்த உதிரி பாகங்கள் போன்றவை மாற்றப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ஷாப்ட் இயந்திரம் கொண்டு வரப்பட்டு மாற்றப்பட்டது. பராமரிப்புப்பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக ரோப்கார் பெட்டியில் கற்களை அடுக்கி வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.  

வல்லுநர் குழு ஒப்புதலை தொடர்ந்து இன்று அதிகாலை ரோப்கார் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ரோப்கார் நிலையத்தில் பெட்டிகளின் முன்பு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூசணிக்காய் உடைக்கப்பட்டு, ரோப்கார் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நிகழ்ச்சியில் பழநி கோயில் செயல் அலுவலர் மற்றும் தக்கார் ஜெயச்சந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் (பொ) செந்தில்குமார், ரோப்கார் கண்காணிப்புக்குழு உறுப்பினர் நாச்சிமுத்து மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ரோப்கார் பயன்பாட்டிற்கு வந்திருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Tags : pilgrims ,The Pilgrims' Temple , Palani Temple Ropkar: The Pilgrims' Temple
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்