தோஹா: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் அமெரிக்க அணி அதிகபட்சமாக 11 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியது.கத்தார் நாட்டில் செப்டம்பர் 27ம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய இந்த தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. தொடக்கத்தில் இருந்தே பதக்க வேட்டையில் முன்னிலை வகித்த அமெரிக்க அணி அதிகபட்சமாக 11 தங்கப் பதக்கங்களை கைப்பற்றியது. கென்யா 2வது இடமும் (4-2-3), ஜமைக்கா (3-4-2) 3வது இடமும் பிடித்தன. சீன அணி தலா 3 தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று 4வது இடம் பிடித்தது.
இந்திய அணி சார்பில் மொத்தம் 27 வீரர், வீராங்கனைகள் களமிறங்கிய நிலையில், ஒரு பதக்கம் கூட வெல்ல முடியாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. கலப்பு 4X400 மீட்டர் ரிலே, ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ், மகளிர் ஈட்டி எறிதல் பிரிவுகளில் மட்டும் இறுதிப் போட்டி வரை முன்னேறி ஆறுதல் அளித்தனர். ஸ்டீபிள்சேஸில் அவினாஷ் சேபிளும், கலப்பு 4X400 மீட்டர் ரிலே அணியும் ஒலிம்பிக் ‘கோட்டா’ இடத்தை உறுதி செய்த நிலையில், மகளிர் ஈட்டி எறிதல் பைனலில் 8வது இடம் பிடித்த அன்னு ராணி ஒலிம்பிக் வாய்ப்பை நழுவவிட்டார்.அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியின் செயல்பாடு மிகுந்த பின்னடைவை கொடுத்துள்ளது.