×

கீழடியில் நடைபெற்று வரும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் திடீர் நிறுத்தம்: ஆவணப்படுத்தும் பணிகள் நடப்பதாக அமைச்சர் விளக்கம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வந்த அகழாய்வுப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழிலாளர்களை பணிக்கு வரவேண்டாம் என தொல்லியல் துறை கூறியுள்ளதாக கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் கீழடியில், கடந்த ஜூன் 13-ம் தேதி 5-ம் கட்ட அகழாய்வு தொடங்கியது. அதில், சுமார் எட்டரை ஏக்கர் நிலத்தில் 52 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் சங்கு வளையல், இரும்பு குண்டு,  உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. செப்டம்பர் 30ம் தேதியுடன் அகழாய்வு நிறைவு பெறவிருந்த நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருந்தார்.

அதனடிப்படையில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தொடர்ந்து அகழாய்வை நீட்டிப்பதில் அதிகாரிகளுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால், அகழாய்வுப் பணிக்கு வந்தவர்களை, வேலைக்கு வரவேண்டாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்கள் வேலை செய்ததற்கான சம்பளம் முழுமையாக வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் அகழாய்வை தொடங்கும்போது அழைப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கூறுகையில் கீழடியில் கிடைத்துள்ள பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெறுவதால் தற்காலிக தொழிலாளர்கள் திருப்பி அனுப்ப பட்டதாக கூறியுள்ளார்.

கீழடியில் மத்திய தொல்லியல் துறை மேற்கொண்ட முதல் 3 அகழாய்வில் கிடைத்த பொருட்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கீழடி அகழாய்வில் கிடைத்த அனைத்து பொருட்களையும், முறையாக ஆவணப்படுத்த வேண்டும் என்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வலியுறுத்தியிருக்கிறார். கீழடிக்கு பார்வையாளர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் ஓருசில இடங்களை பார்வையிட தடை விதிக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


Tags : phase ,Minister , Subsequently, inspection work, stop
× RELATED 4ம் கட்ட தேர்தல் 96 தொகுதியில் மனு தாக்கல் துவக்கம்