×

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ‘ஜாலி வாக்கிங்’ தாயை பிரிந்த பெண் யானை குட்டி வண்டலூர் பூங்காவுக்கு செல்கிறது

சத்தியமங்கலம் : வனப்பகுதியில் இருந்து தாயை பிரிந்து தவித்து வந்த பெண் யானை குட்டியை வனத்துறையினர் வன கால்நடை மையத்தில் பராமரித்து வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாயை பிரிந்த பெண் குட்டி யானை அந்த பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களில் புகுந்தது. தகவலறிந்த வனத்துறையினர், குட்டி யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இந்த நிலையில் கடந்த 2ம் தேதி குட்டி யானை, ஆசனூர் வனப்பகுதியில் உள்ள வனச்சாலையில் சோகமாக சுற்றித்திரிந்தது.

இதைப்பார்த்த வனத்துறையினர், குட்டி யானையை பத்திரமாக மீட்டு பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரை வன கால்நடை மையத்திற்கு கொண்டு சென்றனர். குட்டி யானையை பரிசோதித்த வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் அந்த குட்டி யானைக்கு 3 மாத வயது இருக்கும் என்றும் தாய் யானையை பிரிந்ததால் மற்ற யானைகள் இந்த குட்டி யானையை சேர்க்காது என்றும் அதனால் குட்டி யானை தனிமையில் விடப்பட்டு தவிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து குட்டி யானையை பராமரித்து வளர்க்க வனத்துறையினர் முடிவெடுத்தனர். குட்டி யானைக்கு அம்மு என செல்லமாக பெயரிட்டு வளர்த்து வருகின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், `குட்டி யானைக்கு தினமும் 15 லிட்டர் லேக்டோஜென் பால் உணவாக வழங்கப்படுகிறது. இத்துடன் ஊட்டச்சத்து டானிக் வழங்கப்படுகிறது. பால் குடித்த குட்டி யானை வன கால்நடை மையத்தில் ஜாலியாக நடைபயணம் மேற்கொள்கிறது. இந்த குட்டி யானையை சுற்று வட்டார பகுதி மக்கள் மட்டுமின்றி வெளியூர்களிருந்து வந்து பார்த்து ரசிப்பதோடு குட்டி யானையுடன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

பெண் குட்டி யானை மருத்துவமனை வளாகத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் காட்சியை பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர். குட்டி யானை பிறந்து 6 மாதம் ஆகும் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக உட்கொள்ளும் குணமுடையது. 6 மாதங்களுக்கு பிறகு தீவனம் உட்கொள்ளும் என வனத்துறையினர் தெரிவித்தனர். விரைவில் இந்த பெண் குட்டி யானையை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்று பராமரிக்கப்பட உள்ளது’ என்றனர்.

Tags : tiger archive ,Satyamangalam ,Vandalur Park ,Jolly Walking For Vandalur Zoo , Vandalur ,Vandalur Zoo,satyamangalam ,Young Elephant
× RELATED ஈரோட்டில் யானை தாக்கி விவசாயி பலி