காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள தேவகோட்டை ரஸ்தா காதி நகரை சேர்ந்தவர் ஜெயராஜ் (62). ஓய்வுபெற்ற அஞ்சல் துறை அதிகாரி. இவரது மனைவி காணிக்கை மேரி. 3 மகன்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். 10 நாட்களுக்கு முன் ராமேஸ்வரத்தில் உள்ள மூத்த மகன் வீட்டுக்கு, மனைவியுடன் சென்ற ஜெயராஜ், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு 170 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்படி காரைக்குடி தெற்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பாம்பு புகுந்ததால் பூட்டிய வீட்டில் 60 பவுன் கொள்ளை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே காட்டுப்பட்டியை சேர்ந்தவர் மரியசெல்வம்(52). உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை. கணவர் இறந்துவிட்டார். மகள் சுற்றுலா சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் மாலை அவரது வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டது. இதனால் அச்சத்தில் வீட்டை பூட்டிவிட்டு பக்கத்துக்கு வீட்டில் தூங்க சென்றுள்ளார். நேற்று காலை வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த பீரோவை உடைத்து 60பவுன் நகைகள், சம்பளபணம் 45 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. புகாரின்படி மணப்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.