×

திருச்சி நகைக்கடையில் கொள்ளை புதுச்சேரியில் நடிகையுடன் பதுங்கிய கும்பல் தலைவன்?

திருச்சி: திருச்சி நகைக்கடையில் 13 கோடி நகை கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டு தலைமறைவாக இருக்கும் முருகன், நடிகையுடன்  புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின்பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் பிரபல நகைக்கடையில் கடந்த 2ம் தேதி அதிகாலை சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 13 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பினர். இதுதொடர்பாக திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 4.8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தனிப்படையிடம் பிடிபட்ட மற்றொரு கூட்டாளியான சுரேஷ், அவரது நண்பர்கள் முரளி, ரவி உள்ளிட்ட 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளை கொள்ளை கும்பல் தலைவன் முருகன் உள்ளிட்டோர் தஞ்சையில் வைத்து பிரித்துக்கொண்டு தனித்தனியே சென்றதும், அங்கிருந்து முருகன் காரில் தப்பிய தகவலும் போலீசாருக்கு தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் கைதான மணிகண்டன் மற்றும் முருகனின் அக்கா கனகவல்லி ஆகியோரை போலீசார் நேற்றுமுன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் தொடர்ந்து முருகனுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டாளிகள் இருப்பதால் அவர்களிடம் அடைக்கலம் தேடி முருகன் சென்றிருக்கலாம் என தேடி வருகின்றனர். இதற்கிடையே ஒரு நடிகையுடன் முருகன் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் வந்ததால் புதுச்சேரி மற்றும் தென்மாவட்டங்களில் தனிப்படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

நடிகைகள் பட்டியல் தயார்
முருகனுக்கு முன்னணி நடிகைகளுடன் தொடர்புள்ளதால் அவர் 23 கிலோ நகைகளை ஒரு நடிகையிடம் கொடுத்து வைத்திருப்பதும், அந்த நடிகையுடன் அவர் தலைமறைவானதும் தெரிய வந்துள்ளது. இதனால் முருகனுடன் தொடர்புடைய நடிகைகள் பட்டியலை போலீசார் எடுத்து வருகின்றனர். அதன்படி அவர்களிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags : gang leader ,Trichy ,jewelery shop ,actress ,Puducherry , Loot , Trichy jewelery , Puducherry, gang?
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...