பெரம்பூர்: புளியந்தோப்பு, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு, பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தங்கி, வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் அவர்கள் தங்கியிருந்த பகுதியில் ஆயுதபூஜை கொண்டாடியுள்ளனர். பிறகு அனைவரும் இரவு வழக்கம் போல் அதே வளாகத்தில் உள்ள தங்கள் குடியிருப்பில் உறங்க சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை முதல் தளத்தில் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராம்சஞ் ஜீவ்சிங் (26) ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார்.
தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 3வது மாடியில் படுத்து தூங்கிய ராம் சஞ்ஜீவ்சிங் தவறி விழுந்திருக்கலாம் என கட்டுமான நிறுவத்தினர் தெரிவித்தனர். தினமும் தனது அறையில் தூங்கும் ராம் சஞ்ஜீவ்சிங் எதற்காக 3வது மாடிக்கு சென்றார். எப்படி கீழே விழுந்தார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை யாரேனும் அழைத்து சென்று தள்ளிவிட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.