பெய்ஜிங்: சீன ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தியுடன் (ஆஸ்திரேலியா) நேற்று மோதிய ஒசாகா 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றினார்.
விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 50 நிமிடத்துக்கு நீடித்தது. நடப்பு சீசனில் ஒசாகா தொடர்ச்சியாக வென்ற 2வது சாம்பியன் பட்டம் இது. கடந்த சில வாரங்களுக்கு முன் தனது பிறந்த ஊரானா ஒசாகாவில் நடந்த ஜப்பான் ஓபனில் பட்டம் வென்றிருந்த அவர், தற்போது சீன ஓபனிலும் சாம்பியனாகி அசத்தியுள்ளார். 2019ல் ஒசாகா மொத்தம் 3 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.