×

2 மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராகுல் திடீரென பாங்காக் பயணம்: கட்சியினர் மத்தியில் பரபரப்பு

புதுடெல்லி: மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி திடீரென பாங்காக் புறப்பட்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு வரும் 21ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இரு மாநில சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று திடீரென பாங்காக்கிற்கு புறப்பட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு வேட்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு பிரசாரமும் துவங்கிவிட்டது.

இந்நிலையில், அரியானா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் தன்வார், கட்சிப் பதவி விலகிய நிலையில் அவர் கூறுகையில், ‘‘ராகுலால் வளர்க்கப்பட்டவர்கள் கட்சியில் ஓரங்கட்டப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி தற்போது கடுமையான சவாலை எதிர்கொள்ள உள்ளது’‘ என்றார். கடந்த சில தினங்களுக்கு முன், மகாராஷ்டிரா மாநிலத்தின் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம், ‘‘தனது ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்காவிட்டால் பிரசாரத்தில் பங்கேற்க போவதில்லை’’ என்று அறிவித்தார். மேலும், ‘‘கட்சித்தலைமை தொண்டர்களிடம் இருந்து கருத்துக்களை பெற முயற்சிக்கவில்லை’’ என்றார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது மற்றும் நாடு முழுவதும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை ஆகிய இரு முக்கிய பிரச்னைகளை, இரு மாநில தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன. இந்த சூழ்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில் ராகுல்காந்தி பாங்காக் சென்றிருப்பது கட்சியினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அவர் வரும் 10ம் தேதிக்குள் நாடு திரும்புவார் என்று, தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : trip ,Bangkok ,Rahul ,state elections , State Election, Rahul, Bangkok Travel
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்