வாழப்பாடி: சேலம் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் கரியகோயில், ஆணை மடுவு அணைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், காவிரி உபரிநீர் பயன்பாட்டுத்திட்டம் நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு கிழக்கு பாசன விவசாயிகளிடம் எழுந்துள்ளது. தமிழகத்தில் 13 டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்கான நீராதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது. ஆனால், இந்த அணையால் சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. நீர்நிலைகளை நம்பியே இங்கு விவசாயம் நடக்கிறது. தற்ேபாது ஆக்கிரமிப்புகள் மற்றும் வறட்சியால், பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. அதே நேரத்தில் ஆண்டு தோறும் மழைக்காலத்தில் மேட்டூர் அணை நிரம்பும் போது, லட்சக்கணக்கான லிட்டர் நீர், வீணாக கடலில் கலக்கிறது.
இந்த நீரை சேலத்திலுள்ள திருமணிமுத்தாறு, சரபங்கா, வசிஷ்ட நதிகளுக்கு திருப்பி விடுவதற்கான உபரிநீர் பயன்பாட்டு திட்டத்தை ெசயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்ேபாது மேட்டூர் உபரிநீரை, கரூர் மாவட்டத்தில் சேமிக்க தடுப்பணை கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இருந்தும் பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் கரியகோயில், ஆணைமடுவு அணைகளுக்கு காவிரி உபரிநீரை திருப்பி விடும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் சேலம் கிழக்கு பாசன பகுதிகளை சேர்ந்த வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
வாழப்பாடியை அடுத்த அருநூற்று மலை அடிவாரம் புழுதிக்குட்டை கிராமத்தில், வசிஷ்ட நதியின் குறுக்கே 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 283 ஏக்கர் பரப்பளவில் ஆணைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால், குறிச்சி, சின்னம நாயக்கன்பாளையம், சந்திரபிள்ளைவலசு, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துகோம்பை உள்ளிட்ட கிராமங்களில், 5,011 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது. பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் வெள்ளாற்றின் குறுக்கே, 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் விதத்தில் கரியகோவில் அணை அமைந்துள்ளது. இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த அணைகளை நம்பியே ஆயிரக்கணக்கான ஏக்கரில் பாக்கு சாகுபடி நடந்தது. இந்தியாவின் பாக்கு உற்பத்தியில் 10 சதவீதம் தமிழகத்தில் நடக்கிறது. இதில் தமிழகத்தின் 40 சதவீத பாக்கு உற்பத்தி சேலத்தில் நடக்கிறது. சேலம் மாவட்டத்ைத பொறுத்தவரை வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புழுதிக்குட்டை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, குறிச்சி, பேளூர் கொட்டவாடி பகுதிகளில், பாக்கு சாகுபடி அதிகளவில் நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அணைகள் வறண்டு கிடப்பதால் சாகுபடி பாதித்து பெருமைக்கு உலை வைத்து வருகிறது.