×

ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைப்பதற்கு எதிர்ப்பு: தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

சென்னிமலை:  ஆழ்துளை கிணறுகளை சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னிமலையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளை கிணறுகளை சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னிமலையில் 30க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. கடந்த சில நாட்களுக்கு முன் ஈரோடு வீரப்பம்பாளையம் ரோடு பகுதியில் அனுமதியின்றி நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதாக ஈரோடு கலெக்டர் கதிரவனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 30ம் தேதி சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்து 2 தனியார் நிறுவனங்கள் அனுமதியின்றி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து விற்பனை செய்ததை கண்டறிந்தனர். தொடர்ந்து அந்த 2 நிறுவனங்களுக்கு உடனடியாக அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அதன் அருகில் இருந்த மற்ற 2 நிறுவனங்களுக்கும் சீல் வைத்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அனைவரும் அனுமதியின்றி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் சென்னிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் விற்பனை செய்பவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் விற்பனை செய்வதற்கு அரசு உடனடியாக லைசென்ஸ் வழங்குவதாக இருந்தால் அதை நாங்கள் பெறுவதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் அப்படி எதுவும் வழங்காத நிலையில், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைப்பதை கண்டித்து நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்,’’ என்றனர்.

Tags : sealing ,wells ,Water truck owners , Deep well, seal, water truck, strike
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்