சென்னை: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை கொண்டாட உள்ள தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நம்மை வாழவைக்கும் தெய்வங்களையும் ஆயுதங்களையும் வணங்கும் நாள் ஆயுதபூஜை. கல்விக்கு அதிபதி சரஸ்வதி. ஞானத்தை அருள்பவள் அவளே. அந்த அன்னையை வணங்க நவராத்திரி பண்டிகையின் நவமி நாள் நல்ல நாள். அன்றைய தினம் ஆயுதங்களையும் வணங்குகிறோம். நாம் உபயோகப்படுத்தும் பொருட்கள் மட்டுமின்றி பைக், கார்,சிறுவர்களின் சைக்கிள்கள் வரை பூஜை போட்டு குதுகலிக்கின்றனர். சரஸ்வதி பூஜையையொட்டி, பூஜையறையில் புத்தகம், பேனா போன்றவற்றை வைத்து, சரஸ்வதி அருளை பெற வழிபடுகின்றோம். அதேபோல தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்றதை கொண்டாடும் நாளே விஜயதசமி திருநாளாகும்.
கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. முப்பெருந்தேவியரையும் 9 நாட்கள் வழிபடுவதே நவராத்திரி. முதல் 3 நாட்கள் சக்திக்கு உரியதாகவும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவிக்கு உரியதாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியதாகவும் கொண்டாடப்படுகிறது. நாளைய தினம் தொடங்கி சரஸ்வதிக்கு பூஜை செய்யும் நாள் தொடங்குகிறது. சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை புரட்டாசி 20ஆம் தேதி அக்டோபர் 7 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வ்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை கொண்டாட உள்ள தமிழக மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக மக்கள் அனைவரும், அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று, சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட எங்களது உளமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளனர்.