இலங்கை: இலங்கையில் அடுத்த மாதம் 16ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும் இந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான கோத்தபயா ராஜபக்சே, இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். `இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இலங்கை குடிமகன் அல்ல’ என இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இலங்கையில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் அல்லது குடிமகன் அல்லாதவர் தேர்தலில் போட்டியிட அனுமதி கிடையாது.
இந்த வழக்கில், `கடந்த 2003ம் ஆண்டு இலங்கை குடியுரிமையை துறந்த கோத்தபயா, 2005ல் ராஜபக்சே ஆட்சி அமைத்ததும் மீண்டும் இலங்கை குடியுரிமை பெற்றார். மேலும், கடந்த மே மாதம், அமெரிக்க குடியுரிமையையும் துறந்தார்’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதனால் கோத்தபயா, அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்த சிக்கல் நீங்கி உள்ளது. பெரும்பான்மையினரான புத்த மதத்தினர் மத்தியில் கோத்தபயாவுக்கு ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.