மும்பை: பி.எம்.சி. வங்கியில் நடந்துள்ள 4,355 கோடி ஊழல் தொடர்பாக அந்த வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். பி.எம்.சி. வங்கியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த வங்கியின் செயல்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி 6 மாத காலத்துக்கு முடக்கியுள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக மும்பை போலீசின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அவர்கள் நேற்று முன்தினம் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமசை கைது செய்தனர். நேற்று அவரை கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் எஸ்.ஜி.ஷேக் முன்பு ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து ஜாய் தாமசை அக்டோபர் 17ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
வங்கி மோசடி சதியில் ஜாய் தாமசுக்கு தொடர்பு இருப்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோர்ட்டில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் ஜாய் தாமஸ் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாக அவருடைய வழக்கறிஞர் கூறினார். இந்த வழக்கில் போலீசார் ஏற்கனவே எச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் இயக்குனர்கள் ராகேஷ் வத்வான் மற்றும் அவருடைய மகன் சரங்க் ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் அக்டோபர் 9 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்ட எப்ஐஆரில் வங்கியின் முன்னாள் சேர்மன் வார்யம் சிங் சேர்க்ப்பட்டிருந்தார். நேற்றிரவு அவர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப் பட்டார்.