சென்னை: கிண்டி காமராஜர்புரம் காந்தி தெருவை சேர்ந்தவர் போஸ் (50). தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.கடந்த சில தினங்களுக்கு முன் போஸிடம் வேன் ஓட்டும் டிரைவர் மணி, தண்ணீர் கேன் வேனில் ஏற்றிக்கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த மதுரைமணி, இங்கெல்லாம் கேன்களை வைக்கக் கூடாது என கூறி தகராறு செய்துள்ளார்.இதுகுறித்து கிண்டி காவல் நிலையத்தில் மதுரை மணி மீது போஸ் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை போஸ் தனது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தபோது திடீரென வீட்டு கதவு தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஓடிச்சென்று தாழ்ப்பாளை திறந்து எரிந்து கொண்டிருந்த கதவை தண்ணீர் ஊற்றி அணைத்தார். இதுகுறித்து, கிண்டி காவல் நிலையத்தில் முன்விரோத தகராறில் மதுரைமணி என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக போஸ் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சந்துரு சம்பவ இடத்துக்கு சென்று இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.