×

போலீஸ் அபராதம் விதித்ததால் ஆத்திரம் நடுரோட்டில் பைக்கை எரித்த பாரதிய ஜனதா பிரமுகர்

*தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி : போலீசார் அபராதம் விதித்ததாக கூறி ஆத்திரத்தில் தூத்துக்குடியில் நடுரோட்டில் பாஜ பிரமுகர், பைக்கை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள பீங்கான் ஆபீஸ் ஜங்ஷன் பகுதியில் நேற்று மாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நடுத்தர வயதுள்ள ஒருவர் ஹெல்மெட்  அணியாமல் பைக்கில் வந்துள்ளார். போலீசார் அவரை நிறுத்தி வழக்கு பதிந்து அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர், பைக் இருந்தால்தானே வழக்கு போடுவீர்கள், இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கூறி தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி பெட்ரோலில் நனைத்து பைக் மீது போட்டு தீ வைத்துள்ளார். மேலும் கொழுந்து விட்டு எரியும் பைக்கினை சுற்றி வந்தவர், அங்கிருந்து சென்றுவிட்டார்.பொதுமக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் இச்சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பலரும் தங்களது செல்போன்களில் இதனை வீடியோ எடுத்துள்ளனர்.

தகவலறிந்த தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த பிளம்பர் வேலு(44) என்பதும், பாஜ பிரமுகராக இருப்பதும் தெரியவந்தது. குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் அவர் பைக்கை தீ எரித்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.வேலு பைக்கிற்கு தீ வைத்து எரித்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் போலீசாருக்கு எதிரான தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

Tags : Bharatiya Janata Party ,BJP Worker , BJP ,Police fine,thoothukudi,Fire, traffic rules
× RELATED தேசிய மலரான தாமரை சின்னத்தை...