×

விடுமுறை காலங்களில் சிவகங்கையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுமா?

சிவகங்கை :  விசேஷ காலத்தையொட்டிய விடுமுறை நாட்களில் சிவகங்கையிலிருந்து சிறப்பு பஸ்கள் மற்றும் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கையிலிருந்து திருப்புத்தூர், திருச்சி, மதுரை, கோயம்பத்தூர், ராமேஸ்வரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் திருப்புத்தூர் வழி காரைக்குடி, மதுரை, தேவகோட்டைக்கு அதிகமான பயணிகள் சிவகங்கையிலிருந்து பயணம் செய்வர். மதுரைக்கு சிவகங்கையிலிருந்து செல்லும் பஸ்களில் பெரும்பாலானவை தொண்டியில் இருந்து சிவகங்கை வழியாக மதுரை செல்லக்கூடியதாகும். சிவகங்கையிலிருந்து மதுரைக்கு நேரடியாக இயக்கப்படும் பஸ்கள் சில மட்டுமே.

இந்த பஸ்களும் நாள் முழுவதும் சிவகங்கை- மதுரை செல்வன அல்ல. திருப்பூரிலிருந்து வரும் பஸ், இரவு நேரத்தில் சென்னை செல்லும் பஸ் உள்ளிட்டவைகள் காலை நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் மதுரைக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்றிலிருந்து சனி, ஞாயிறு மற்றும் ஆயுத பூஜையையொட்டி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை என்பதால் நேற்றிலிருந்து அனைத்து பஸ்களிலும் ஏராளமான கூட்டம் காணப்படுகிறது. மேலும் இந்த விடுமுறை காலத்தில் தீபாவளிக்கு ஜவுளி வாங்க மதுரை மற்றும் காரைக்குடிக்கு ஏராளமானோர் செல்வர்.

தொண்டியிலிருந்து மதுரை செல்லும் அனைத்து பஸ்களும் சிவகங்கை வரும்போது அதிகப்படியான கூட்டத்துடனேயே காணப்படும். இதனால் சிவகங்கையில் இருந்து செல்பவர்கள் நின்று கொண்டுதான் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. தற்போது கூட்டம் இன்னும் அதிகப்படியாக உள்ளது. எனவே சிவகங்கையிலிருந்து மதுரை, காரைக்குடிக்கு சிறப்பு பஸ்களும், மாவட்டத்தில் உள்ள கோயில்கள், கிராமங்களுக்கு செல்லும் வகையில் கூடுதல் டவுன் பஸ்களும் இயக்க போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘விசேஷ காலங்களில் முக்கியமான ஊர்களுக்கு சிவகங்கையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என ஆண்டுதோறும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. தற்போது தொடர் விடுறை நாட்கள் வருவதால் இந்த காலகட்டத்திலேயே மதுரை, காரைக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு தீபாவளி ஆடை எடுக்க ஏராளமானோர் செல்வர். இப்பகுதியில் டவுன் பஸ்கள் மிக குறைவு என்பதால் தொலை தூர பஸ்களிலேயே அருகில் உள்ள ஊர்களுக்கு செல்பவர்களும் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே விசேஷ காலங்களுக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : holiday season ,Sivaganga , festival seasons,People, Special Buses,sivagangai
× RELATED சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்!