×

மணிரத்னம் உட்பட 50 பிரபலங்கள் மீது வழக்கு மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

வயநாடு: வடமாநிலங்களில் தலித், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கக் கோரி,  பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். திரைப்பட இயக்குனர் அபர்னா சென், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா,  தமிழ் சினிமா இயக்குனர் மணிரத்னம் உள்பட 50 பிரபலங்கள் கடந்த ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில் வட மாநிலங்களில் ‘ஜெய் ராம்’ என கூற மறுக்கும் சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2009 முதல்  அக்டோபர் 2018 வரை மட்டும் இதுபோன்ற 254 சம்பவங்கள்  மதங்களின் பெயரால் நடந்துள்ளன. கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் சுமார் 840  குற்றச் சம்பவங்கள் தலித்துக்கு எதிராக பதிவாகியுள்ளது. சிறுபான்மையினர் தாக்கப்படுவதைத்  தடுக்க ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க  வேண்டும். ஆளுங்கட்சிக்கு விரோதமாக விமர்சனங்களை வழங்குவது தேசத்துக்கு  விரோதமாக கருதப்பட முடியாது’. என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  உத்தரபிரதேச மாநிலம் முசாபர்பூர் மாவட்ட சார்பு நீதிமன்றம், பிரதமர்  மோடிக்கு பகிரங்கமாக கடிதம் எழுதிய ராமச்சந்திர குஹா, மணிரத்னம் உள்ளிட்ட  50 பிரபலங்களுக்கு எதிராக நேற்று எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. மோடி அரசின் இந்த செயலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேரளா மாநிலம் வயநாட்டில் அந்த தொகுதி எம்பி ராகுல்காந்தி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமருக்கு எதிராக யாராவது கருத்து தெரிவித்தாலோ அல்லது யாராவது மத்திய அரசுக்கு எதிராக பேசினாலோ அவர்கள் தாக்கப்படுவதுடன் சிறையிலும் அடைக்கப்படுகின்றனர். நாட்டில் ஒரே நாடு ஒரே கொள்கை’ என்பதே மத்தியில் ஆள்பவர்களது கொள்கை. மற்றவர்கள் வாயை மூடவேண்டும். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Tags : Mani Ratnam Rahul ,celebrities ,Mani Ratnam , Rahul accused ,prosecuting 50 celebrities ,Mani Ratnam
× RELATED நடிகர் கமல்ஹாசனின் செர்பியா பயணம் ரத்து