போபால்,: மத்திய பிரதேசத்தில் ‘பாபு பவன்’ அருங்காட்சியகத்தில் இருந்த மகாத்மா காந்தியின் அஸ்தி திருட்டு போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் `பாபு பவன்’ என்ற பெயரில் காந்தி அருங்காட்சியகம் உள்ளது. அங்கு, காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2ம் தேதி காந்தியின் 150வது பிறந்தநாளில் அந்த அருங்காட்சியகத்தில் இருந்த காந்தியின் அஸ்தி திருடுபோயுள்ளது. அதனை திருடிய சில நபர்கள், காந்தியின் புகைப்படத்துக்குக் கீழே `தேசத் துரோகி’ எனப் பச்சை மையால் எழுதிச் சென்றுள்ளனர். தகவலறிந்த ரேவா மாவட்ட காங்கிரஸ் தலைவர் குர்மீத் சிங் காந்தியின் அஸ்தி திருட்டு போன சம்பவம் தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் புனித தலத்தை அவமதித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து, ரேவா மாவட்ட டிஎஸ்பி சிவ்குமார் வர்மா கூறுகையில், ``பாபு பவனில் அஸ்தி திருடப்பட்டுள்ள சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் அஸ்தியைத் திருடியவர்களை தேடி வருகிறோம்’’ என்றார்.
இதுகுறித்து குர்மீத் சிங் கூறுகையில், ‘‘காந்தியின் சித்தாந்தம் மீண்டும் இழிவு படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சட்டவிரோதச் செயலை, காந்தியைக் கொலை செய்த கோட்சேவின் ஆதரவாளர்களே செய்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். பாபு பவனில், காந்தி அஸ்தி திருடப்பட்டதற்கு பல அரசியல் தலைவர்கள் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கமல் கண்டனம்
எம் காந்தியின் திருநீற்றை களவுற்ற பக்தர்காள் உம் நெத்தியில் பூசிடவைத்த அச்சாம்பலை ஏற்றதில் மகிழ்கிறோம். இன்னமும் உளது நீர்
சுட்டதின் பிணக்குவியல் கூடிடக்கூடிட உம்பக்தியின் அடி நாதம் காந்தியின் சாம்பலுடன் கைலாயமெய்தவே கணக்கிலா இந்தியர்கள் வழிகோலுகின்றோம் வாழ்த்துடன் கூடியே!