×

ஆயுத பூஜை, தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பஸ்களில் கட்டணம் கடும் உயர்வு: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி ,.. கண்காணிக்க சிறப்பு குழு தயார்

சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி ‘ஆம்னி’ பஸ்களில் டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.   தமிழகத்தில் வரும் 7ம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய நாட்கள் சனி, ஞாயிறாக உள்ளன. இதனால் இன்று இரவே பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்வார்கள்.ரயிலில் இடம் கிடைக்காததால் பஸ் பயணத்தையே மக்கள் நாட வேண்டியிருக்கிறது. இதற்காக தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இன்று முதல் 6ம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் 1,695 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் மூன்று நாட்களுக்கு சென்னையிலிருந்து 6,145 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் பிற ஊர்களில் இருந்து சென்னை வருவதற்கு, மற்ற முக்கிய இடங்களுக்கு செல்வதற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. .மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 5 இடங்களில் சிறப்பு பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

 மேலும், பலர் ஆம்னி பஸ்களில் செல்கின்றனர்.  ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வேறு வழியில்லாமல் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை தடுக்க போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆங்காங்கு திடீர் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் சனி, ஞாயிறு தினங்களில் கட்டணமாக ரூ.600 - 1500 வரையிலும், சென்னை - கோவைக்கு ரூ.700 - 1,700 வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது ஆயுத பூஜையை காரணம் காட்டி கட்டணமானது அதிகப்படியாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து மதுரைக்கு தற்போது ரூ.1,700-ரூ.2,500, சென்னை-கோவைக்கு ரூ.1,700-2,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் ஒவ்வொரு முக்கிய ஊர்களுக்கும் கட்டணம் அதிகமாக உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதேபோல் தீபாவளி பண்டிகைக்கும் குறைவான நாட்களே இருப்பதால் அப்போதும் கட்டண உயர்வு இருக்கும் எனவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

திடீர் சோதனைக்கு திட்டம்
போக்குவரத்துத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடமிருந்து புகார்கள் வருகின்றன. இதையடுத்து சம்பந்தப்பட்ட பஸ்கள் சென்று கொண்டிருக்கும்போதே பாதி வழியில் நிறுத்தி, திடீர் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் ஒருசிலர் பழைய மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத பஸ்களை கொண்டுவந்து இயக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதில் பயணிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு, திடீர் சோதனையில் போது வாகனங்களின் ஆவணம் முறையாக உள்ளதா என்பது குறித்தும் சோதனையிடப்படும். இதற்காக குறிப்பிட்ட இடங்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சென்று ஆய்வு நடத்தப்படும். மேலும் மாவட்டம் தோறும் சோதனை நடத்துவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Omni ,Arms Pooja ,bus fare hike ,holidays ,Armed Forces ,A Special Committee to Monitor , Arms pooja, series holidays, Omni buses, fare
× RELATED புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி