திருவொற்றியூர்: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அகமதாபாத் பகுதியில் இருந்து கன்டெய்னர் லாரி மூலம் சென்னை திருவொற்றியூர் பகுதிக்கு கடத்தி வரப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், எண்ணூர் போலீசார் திருவொற்றியூர் முல்லை நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரிகளை சோதனையிட்டனர். அப்போது, ஒரு கன்டெய்னரில் சுமார் 700 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது.
அதன் மதிப்பு 4 லட்சம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கன்டெய்னர் லாரியுடன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், இதுதொடர்பாக ஆர்.எஸ்.நாயுடு (77), மகேஷ் காட்டி (24), கோவிந் படே (25), அப்பாராவ் (28) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் உள்ள பெட்டி கடைகளுக்கு மாவா தயாரித்து விற்பனை செய்த வியாசர்பாடி எஸ்.எம்.நகர் 80வது பிளாக் பகுதியை சேர்ந்த அருண் (37) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 30 கிலோ மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.